Todays Date:
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

காதலின் ஆட்சி!

ஓயாத கடலுக்கு அருகில்
பேசாத மொழிகளோடு
நாம்!

கரையோரம் நின்றிருக்கிறாய்
பாதங்களை
நுரைகளால் அர்ச்சிக்கின்றன
அலைகள்!

இப்போது பூத்தது போல
எப்போதும்
மலர்ந்திருக்கிறாய்

அதிர்ஷ்டக்க் காற்று…
மோகம் கொண்டு
கூந்தலை
முகர்ந்து
கலைத்துவிடுகிறது

உன் புன்னகையால்
பிரகாசிக்கிறது – என்
முகம்

மெல்லத் துளிர்கிறது
தாபம் - அதை
சொல்லத் துடிக்கிறது
ஆவல்

வார்த்தைகள் கரைந்து
மிஞ்சுகிறது
மௌனம்

உன் மொத்தக் காதலும் - என்
ஜீவனில்
இழையோடுகிறது

நீலவானம்
நீள்வெளிக்கு மத்தியில்
தனியொருத்தியாய்
என்னை ஆள்கிறாய்

அஞ்ஞாதங்களைத் தகர்த்தி
உன்னிடம்
அபயம் வர
பிரியப்படுகிறேன்

உன் பார்வையை ஏந்தி
புன்னகையைப் பருக
தவமிருக்க வேண்டுமடி
கண்மணி!

-இராமானுஜம் நிர்ஷன்-
08.12.2017

விரிவாக படிக்க ……..

காவியத்தின் தேவதை!



நீண்ட இரவின்

மத்திமத்தில்
நிலவும்
நிழலும்
மழையும்…

ஏகாந்தத்தில்
உன்னை
ஏந்திக் காத்திருக்கிறேன்

சிற்றெறும்பு வீழ்ந்து
இலையதிரும் ஓசை
என்னை
இயங்கச் செய்கிறது

என் மனதின்
திறக்கப்படாத காப்பகம்
மெல்ல விரிகிறது

உனக்கு நினைவிருக்கிறதா?

பதின்ம வயதுகளில்
அழகைச் சுமந்த
நீயும்
வேட்கை நிறைந்த
நானும்…

நீ
கண்களால் அபிநயிப்பாய்
நான்
இமைக்க மறந்து
பார்த்திருப்பேன்!

நீண்ட மௌனத்தின்பின்
முதல் வார்த்தை
உதிர்ப்பாய்
நான்
முழுவதுமாய் தாங்கி
சேமித்திருப்பேன்!

நாம்
பேசாத பொழுதுகளில்
பரிமாறிய வார்த்தைகள்
இப்போதும்
இனிக்கின்றன!

அவை - நம்
மனதின்
மையங்களை இணைத்த
மந்திரச் சொற்கள்!

காதல் பாடல்களில்
கற்பனையாகியிருந்தோம்!

சில சந்திப்பு
பல கதை
சிறுதூர நடைகளில்
நாமாகிப்போனோம்!

உன்
நினைவுக் கடலில்
திமில்போல்
மிதந்திருக்கிறேன்!

இன்னுமின்னும்
வாழவேண்டுமென்ற
ஆவலைத் தந்தது - உன்
காதல்!

என் காவியத்தின்
தேவதையாய் - உன்னை
ஆராதித்திருக்கிறேன்!

உன்னை
அள்ளிக் கொள்ளவே -
என் உடல்
உயிர் தாங்குகிறது போலும்!

என் வாழ்க்கையின்
கிழக்கு நீ
இங்கே அஸ்தமனத்துக்கு
இடமில்லை!

வா!
இந்த இரவில்
இந்த நிலவில்
இந்த மழையில்
ஒருவராகியிருப்போம்!

-இராமானுஜம் நிர்ஷன் -

விரிவாக படிக்க ……..

வா.. நெஞ்சத்தின் அக்கிராசனத்துக்கு!

கிளைகள்
குடைபிடிக்க
கீழே
சாய்ந்திருக்கிறாய்

மலர் விழுந்த சோகம்
மரத்துக்கு!

காணும் பொழுதில்
துருவப் பனியாய்
உறைகிறேன்!

பற்றிப் படர்கிறது
காதல்
மெல்லப் பனிகிறது
மோகம்

உருவாகி
கருவாகி
துளிர்க்கிறது தாகம்!

அலைபோல் புருவம்
நாணம் சுரக்கும்!
கருவிழி அசையும்
காந்தம் பிறக்கும்!

அள்ளிக் கொள்கையில்
வினைச்சொல்
உதிரும்!

கண்களின்
கபளீகரத்தை காண்கையில்
உளிதட்டுகிறது
இதயம்!

அணைந்து பிணைந்து
மேவிக் கணையாகி
காதல் பருகுவோம்
வா!

பருகிச் சுவைத்து
மூர்ச்சை இழுத்து
முடிவிலி காண்போம்
வா!

மொத்தமாய் கவர
வித்தைகள் புரிய

தொடுகையில் உணர
நெடுமையாய் ஆள

சத்தம் தவிர்த்து
பித்தம் நிறைக்க

தேவதை உன்னை
காதலோடு அழைக்கிறேன்
என் நெஞ்சத்தின்
அக்கிராசனத்துக்கு!

-இராமானுஜம் நிர்ஷன்-

விரிவாக படிக்க ……..

மோகம் சுரக்கும் மந்திரம்!









மோகம் சுரக்கும் மந்திரக் கண்களில்
இமைகள் மூடும் சப்தம் கேட்டேன்
காதலின் அந்தம் வரை ருசிக்கத் தூண்டி
வசியப்பட்டுப் போனேன்

கரங்கள் இரண்டும் 
மந்திரக் கோல்கள்
விரல்நுனி பட்டதும் 
விடலையாய் உயிர்க்கிறேன்


தாடை இழுத்துப் பேசும் பொழுதில்
வகுளம் பூவின் 
மருத்துவம் உணர்கிறேன்



இதழ்கள் அவிழ்க்கும் 
பெண்மை நீ
முத்தம் குடிக்கும் 
மிருகம் நான்!


அசைவில் இசைதரும் காரிகை நீ
அதை மீட்டத் துடிக்கும் ரசிகன் நான்!


கடந்து செல்கிறாய்
ஆனந்தத்தின் உச்சியில்
தவழ்கிறது மனது


புன்னகை செய்கிறாய்
பண்டிகை போல
கொண்டாடுகிறது மனது


நம் சந்திப்புகளை
பிரதியிட்டு சேமித்திருக்கிறேன்
பிரசவத்துக்காக காத்திருக்கும்
கனவுகளோடு!

வா!
முதுமையின் எல்லைவரை
இளமையாய் காதலிப்போம் 
வா!

அழகிய தேசம் எதுவும்
வேண்டாம் எமக்கு!

நானும் நீயும் என்றாலே - புது
உலகம் தானே நமக்கு!


-இராமானுஜம் நிர்ஷன்-



விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா VII

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் கலந்தனவே”

இது குறுந்தொகைப் பாடல்.

நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நீயும் நானும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றையொன்று பிரிக்க முடியாததுபோல, நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்துவிட்டனவே என்கிறது அதன்பொருள்.

உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்த வரிகள் இவை.

மலர்ந்த முகமும் தலைசாய்த்ததான ஓரப்பார்வையும் பிடிமானத்தை மேலும் அதிகரித்தன. ஏதேதோ பேசினோம் - பகிர்ந்துகொண்டோம். ஆயினும் முழுமையாக முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொள்வதற்கு மனம்துடித்ததேயன்றி இலாவகமாய் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

சுவைசொட்டும் பள்ளிக்காலங்களையும் விட்டு விலகாத பாழ்ய நினைவுகளையும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டதில் முழுத் திருப்தி.

படித்தவள் - பெருந்தன்மையில்லை
பண்பானவள் - பொறாமைகளில்லை
அன்பானவள் - ஆடம்பரங்களில்லை

சாந்தமான பார்வைகளால் சங்கேதங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

கடிகார முள் தடைபட்டாலும் நேரத்தை விஞ்ச முடியாத துர்பாக்கியசாலிகளாய் நிறைய எதிர்பார்ப்புகளோடும் - நிறைவான பொழுதுகளைக் கழித்த திருப்தியோடும் விடைபெற்றுக்கொண்டோம்.

பெண்ணுக்குத் தையல் என்றொரு மறுகருத்துண்டு. பிரிந்த உறவுகளை இணைத்தல், உடைந்துபோன மனதை ஒத்தடமாய் மாற்றியமைத்தல் போன்றவற்றை அன்போடு செய்விப்பதால் இந்தப்பெயருண்டு என எங்கோ படித்த ஞாபகம்.

மெய்தான்.

தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து பல்திசைகளுக்குச் செல்லும் அலைகள்போல ஆற்றாமை எனும் இயலாமையால் சிதறிப்போன மனதோடு வந்த எனக்கு ஆறுதலாய் அவளும் அந்தச் சந்திப்பும் மாறியிருந்தது.

காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?

வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?

இவை அன்றிரவு என் பாமர உள்ளம் உதிர்த்த வரிகள்.





எப்போதும் இணையமுடியாது எனத் தெரிந்தும் குரங்கு மனது எப்படியெல்லாம் அலைபாய்கிறது? வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்றா?

நிலையாமை பற்றிக் கற்றறிந்தும் இந்த விடயத்தில் பக்குவம் என்பக்கம் வராமைக்குக் காரணம் என்ன?

இப்படியும் நான் சிந்திக்கையில் அதையும் தாண்டி என் ஜீவனின் ஆனந்த நரம்புகளில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது ப்ரியாவின் பிஞ்சுக் குரல்.

என்னைத் தாண்டிய மாற்றுச்சூழலுக்குள் மீண்டும் லயித்துப்போகிறேன்…. அதன்பின்வந்த ஜாமங்கள் எப்படிக் கழிந்ததென்பதை வெளிச்சொல்ல எத்தனிக்கையில் ஓர் அசட்டு வெட்கம் கட்டிப்போடுகிறது.

அமைதியாய் இருந்த என்னுடைய தொலைபேசிக் குழந்தை இரவு 11 மணிக்கு அழுதது. அவள் இலக்கத்தைப்பார்த்து இயல்பாய் உதடுகள் புன்முறுவலைப்பிரசவிக்க “ஹெலோ” என்றேன். 30 செக்கன் மௌனத்தின் பிறகு “கனவுபோல் இருக்கிறது” என ஆரம்பித்தாள்…

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

விரிவாக படிக்க ……..

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்
(தங்கை துர்காவின் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவிட்டுள்ளேன்)

விரிவாக படிக்க ……..

ஓர் உண்மை வாசகம்


கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்

மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…

பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…

உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….

இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது

மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்

கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்

கோடி பூக்களோடு
நீ – என் வானில்

பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு

‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா (02)

"சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது. சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்"

------------------------------------------------------------


1996.

நான் இயற்கையை முழுமையாக ரசிக்கத் தொடங்கிய காலம் । இயற்கைக்கும் மனிதனுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை தனிமையில் பலதடவைகள் சிந்தித்திருக்கிறேன்.

நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பதை தோண்டித் தோண்டிப் பார்த்த ஆவல்மிக்க அந்திநேரங்களை மறக்க முடியாது.

அதிகாலைச் சூரியன், சில்லென்ற காற்று, காட்டுச் சேவலின்கூவல், வீட்டுக்கு நேரேயிருந்த மலைமுகடு, அங்கு ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட காட்டு மரங்கள், புறாக்கூடு, உச்சியிலிருந்து பார்த்தால் தெரியும் அம்மன்கோயில், புல்வெளியற்ற மைதானம், தென்னைமரத்தடி, நிலாச்சாரல் என இன்னும் எத்தனையோ ஆலாபனைகள் என்னை இயற்கையின் மடியோடு கண்ணிமைக்கச் செய்திருந்தன.

மனிதனுக்கு பெருஞ்செல்வத்தையும் பேரமைதியையும் தருவதில் இயற்கை தவிர்ந்த பெருங்கொடை வேறெதுவும் இல்லை.

காலம் தள்ளிப்போய் முதல் பருவங்களை கடந்தபோதுதான் அறிந்தேன். இந்த இயற்கைக்கும் “பெண்” என்ற படைப்புக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்பதை.

அதுவும் பள்ளிப்பருவத்தில்…

பெண்ணுக்குள் பெருஞ் செல்வம் அடங்கியிருக்கிறது. அதைக்கொண்டு அவளால் பேரமைதியைத் தரமுடியும்.

1997.

“பிரியா”
பள்ளியில் அவளுக்குத்தான் முதலிடம். அவளருகில் நிற்பதற்குக் கூட போட்டிபோட்ட நாட்கள்…. திறமையும் ஆளுமையும் கடவுள்கொடுத்த கொடை.
அதற்கும் மேலாக…. அவள் அழகு!

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।

பிரியாவின் அசைவுகளும் ரசனைமிக்கன. வெறுமையுற்ற பொழுதுகளில் அவளை கவிதையாகக் கீறி மனதில் செதுக்கிக்கொண்டேன்.

சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது। சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அசைவுகளால் வசியச்செய்யும் அவள், அவளுக்கே தெரியாமல் என்னுள் சிற்பமாகிக்கொண்டிருந்தாள்.

"வானம் அந்திப்படும்பொழுதிலும்
உன் வருகை எனக்கு விடியலைத் தருகிறது

எதேச்சையாகக்கூட பார்க்கமாட்டாயா?
காதல் விமோசனத்துக்காக எத்தனை நாள் காத்திருப்பது?

இந்த விடலை நினைவுகள் விதையாக்கப்படுமானால்
வளர்ந்த பின் விருட்சத்தை எப்படி வீழ்த்துவாய்?

காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"

இவை,அவள் நினைவுகளால் என்குள் பிரவித்தவை.

அவள்மீது காதல் கொள்ளவில்லை. மாறாக ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்குள் இருப்பதாயும்
அது அன்பின் நிலைகள் எல்லாவற்றையும் தாண்டியதாயும் உணர்ந்தேன்.

அமைதியில் அமைதி இருக்கிறதென்பார்கள். தியானத்துக்காக கடவுள் சிலைகளை பார்த்திருப்பதன் யதார்த்தம் இதுதான். அமைதியிலிருந்துதான் அமைதி கிடைக்கிறது என ஓஷோ சொல்லியிருக்கிறார்.
"இல்லாததிலிருந்து உள்ளது தோன்றாது. உள்ளதிலிருந்து தான் உள்ளது தோன்றும்" என்கிறது சித்தாந்தம். அவள் அமைதியிலிருந்து எனக்கும் அமைதி பிறந்தது.

அவள் அதிகமாகப் பார்த்த இடம் அவளுடைய பெருவிரலாகத் தான் இருக்க முடியும்.

மனதின் மையப்புள்ளிகளை அறியமுடியவதில்லை. ஆழமான சோகத்திலும் அளவுக்கதிகமான சந்தோஷத்திலும் நிறைவாக மனம் களித்திருக்கும் வேளையில் எந்தச் செயல்கள் செய்தாலும் அந்த சோகமோ சந்தோஷமோ மனதின் ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து நம்மை வளப்படுத்துவதாய் உணர்ந்திருப்போம். அது அதிகமாய் உணரப்படுவதற்கு சிரமமானது.

அவளைப் பார்த்த பல பொழுதுகளில் அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நான் வாழ்ந்த காலங்கள்.
(தொடர்ந்து பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

அடைமழை – வெறும்வீதி – நீ – நான்



மென்காற்றோடான வாசம்

இந்த வழியில்தான்
சென்றிருக்கிறாய்

வழியிடையெங்கும்
உன் விழிபார்த்த இடமெல்லாம்
விழியொளியில் மெய்மறந்து
சலனமில்லாமல்
அடங்கிப்போயிருக்கின்றன

கால்பதித்த சுவடுகளில்
இனிப்புச்சுவை தேடி
எறும்பூறி மார்பதைக்கின்றன

மணல்வெளியில் சிதறிய
உன் ஒற்றைப்பூவைச் சுற்றித்தான்
எத்தனை வண்ணத்துப்பூச்சுகள்

சலங்கை ஒலிக்குள்
சவீகரித்துப்போனதாய்
சத்தமில்லாமல் விழுகிறது
மழைத்துளி

என் கன்னங்கள் மட்டுமல்ல
அந்தப் பெருநிலமே
நனைகிறது

இதயத்துக்கு உரம் தந்தவளால்
முழு உடலும் ஈரமாகிறது

அடைமழையில்
கண்ணீருக்கான அடையாளங்கள்
காணாமல்போகின்றன
இந்தமழையும்
உன் சிரிப்பும் ஒன்றுதான்

கரைந்துபோகும் உன் சுவடுகளை
கடன் கேட்டா இனிப்பெறமுடியும்?
எனக்கான உன் தற்காலிக
அன்பைப் போலத்தான் இவையும்

உன் முன்னால் நின்று
பேசியதைவிட
உன்னோடு பேசியவை அதிகம்

ஏன்
இந்த பாழ்வீதியில்நின்றுகூட
உன்னோடு நடக்கும்
மௌன ஏகுதல்களுக்கு
ஆதாரம் ஏது?

இந்த வீதி
மழை
மணம்
சுவடுகள்
எல்லாவற்றையும் விட்டுச்செல்கிறேன்…
நீ சென்ற வழிக்கு நேரெதிராக!

நான் நீ இணைந்ததானதைத் தவிர்த்து
எனக்கானவளில்லாத உன்
எதையுமே நான்
எடுத்துச்செல்வதில்லை

மரணம் துரத்தினாலும் - உன்
மடியில் இறக்கும் வேண்டுதல்
இனி என்
பட்டியலில் இல்லை!



- ஆர்.நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

இயற்கையும் காதல்கொள்ளும்..!




சூரியக் காதலன்
எங்கேயென
மின்மினிகளை ஏவித்
தேடுகிறாள் பூமிப்பெண்

காரிருளில்
கண்ணுக்கெட்டாத்தூரம் சென்று
கண்ணயர்ந்துவிட்டானோ என
தென்றலையும்
தூதனுப்புகிறாள்

“எங்கே போனாலும்
அள்ளியணைக்க
வரத்தானே வேண்டும்
அப்போது கிள்ளி இழுத்து
கோபம் தீர்க்கிறேன்”

என
அவனை எதிர்பார்த்தே
நிசப்தமாய் நினைவிழந்து
தூங்குகிறாள்

கழிகிறது நேரம்…

மறுபொழுதில்….

தன்னவளை ஆக்கிரமித்த
பனித்துளிகளை
இமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு
தூங்கும் பெண்ணை
துயிலெழுப்புகிறான் ஆதவன்…

காதலனைக் கண்ட களிப்பில்
கோபம் மறந்து
குதூகலித்து
வாரியணைக்க முற்படுகையில்

அந்தோ…..

நொடிப்பொழுதில் முந்திக்கொண்ட
முகிலவன்
முன்னதாய் முத்தமிடுகிறான்…

முத்தத்தின் தகப்பில்
உணர்வுகள் உயிர்க்க
மிதம்கொண்டு மௌனித்து
மேனிசிவக்கிறாள் அவள்…
உச்சிமுதல் சிவந்ததில்
வானம் நிறந்து நிறைகிறது

ஓ…
காதலர்களின்
புணர்தலைக் கண்ட சேவல்
கூவிக்கூவி கூட்டம் கூட்டுகிறது
விடயம் அறிந்த
விண்மீன்கள்
வெட்கத்தில் மறைய
சல்லாபம் காண
கூடுவிட்டுப் பறக்கின்றன
பறவைகள்

மீள்நினைவுடன் மீண்டெழுகிறாள்
நாணத்தோடவள்...

எப்போதும் என்னோடிருவென
காதலனுக்கு உத்தரவிட்டபடி!

-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

உனக்கான இருப்பு !



உனக்கான
உனக்கேயான
இருப்பும் இடமும்
ஒளியூட்டப்படாமல் இருக்கிறது !

உன்
பிரிவினூடான
ஒவ்வொரு பயணங்களிலும்
அழத்துடித்து
அடங்கிப்போகும்
என்
மனதையும் மையங்களையும் …

உன்
களிப்புகளுக்கிடையில்
உறைந்து ஊனமாகும்
என்
எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும் …

உன்
மென்மொழிகளில்
மௌனம் காக்கும்
என்
ஊமை நினைவுகளின்
அடையாளங்களையும்
ஆத்மார்த்தங்களையும் …


தவிர்க்கவே எண்ணி
தருணம் பார்த்து
தவறாமல் காத்து நின்ற
பொழுதுகளையும்
இருத்தலையும் …

இமைக்கூடங்களில்
சிறையிருக்கும்
கடைசிப் பார்வையையும்
உணர்பாசத்தையும் …

வார்த்தை கோர்த்து
எழுதித் திரித்து
உனக்கான என் இருப்பில்
வைத்திருக்கிறேன் !

தனியறையில்
தவம்கிடக்கின்றன
என் கவிதைகள்
காலத்தோடான அத்தனை நினைவுகளையும்
ஏந்திச் சுமந்தபடி !

ஒன்றும் வேண்டாம்
உன்
கண்களின் வெளிச்சம் கொடு !

அந்த இருட்டறையில்
நீள் வெளியாய் நிறைந்திருக்கும்
வெண்காகிதங்களில்
உன்
பெயர்மட்டும் ஜொலிக்கப்பார்க்க
ஆசை எனக்கு !


-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை

விரிவாக படிக்க ……..

கனவில் எழுதிய கவிதை!



அதுஒரு நிலாப்பொழுது

தனக்கு எட்டிய தூரம்வரை வெண்ணொளிபாய்ச்சி
வெள்ளிமழையில் உலகத்தை நனைத்துக்கொண்டிருந்தது நிலவு.

இரவுதேவதை முழு உலகத்தையுமே ஆட்கொண்டு
மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது.

அந்தி மஞ்சளைக் குழைத்து
மல்லிகை மணத்துடன் செய்யப்பட்ட
தங்கச்சிலையாய் வந்து நிற்கிறாய்.

ஒற்றைப்பார்வையில் இலேசாக இதழ்விரித்து நீ புன்னகை பூக்கையில்
அதனை முழுமையாக உள்வாங்கிய என் உயிர்
இரகசியமாக அதனை உணரத் தொடங்கியது.

தங்கப்பட்டாடை அணிந்த வெள்ளை ரோஜாவாய் கன்னம்சிவக்க நடந்துவந்தாய்.

அருகில் வருகிறாய்.
என் சுவாசம் முழுவதும் உன் வாசம்.

உன் சுவர்ணத்தொடுகைக்காக காத்திருக்கிறேன்.

அழகுதேவதையின் சிங்காரமான கட்டழகு
என் அத்தனை பலத்தையும் கட்டவிழ்த்துப்போட்டது.

ஜன்னல் நிலவொளியில்
வெள்ளித் தகடாய் ஜொலித்த நீ
மின்மினியாய் கண்சிமிட்டிச் செய்த சமிக்ஞைகள்
ஆழ்ந்த இன்பத்துக்கு அத்திவாரமிட்டன.



இந்த பூமியே சிதறிப்போனாலும் உன்னைமட்டும் என்னிலிருந்து விலகாமல்காப்பேன்
என என் மனது உள்மனச்சாட்சியிடம் உறுதிபூண்டுகொண்டது.

மேகத்தை ஒன்றுதிரட்டி செதுக்கிய ஆதர்ஷனச் சித்திரம்போல அருகில் வந்து என்
கண்களைப் பார்க்கிறாய்.

இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!

இரவுவரும்
அதே நிலவும் வரும்
நீ வருவாயா?

-கனவுகளின் வரிகளுடன்
இறக்குவானை நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

என்னைத் தொலைத்த நான்..!



மெழுகுவர்த்தியில் அவள்
முகம்பார்த்துப் பின்
பேனை பிடித்து – அந்த
மனோகரத்தை வரையும்
வேலையில்லாதவன் நான் ..!

கண்திரை மூடும்போதும்
நித்திரை வேண்டாமென
நித்தம் உன்
நினைவில் வாடிய
ஜீவனில்லா ஜடம் நான் ..!


அல்லிப்பூவின் இதழ்கொண்டு
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி
கடலைத்தூற்றி
கரையை அணைத்த
பைத்தியக்காரன் நான் ..!

மனோகரத் தோற்றத்துக்கு
மணிமணியாய் வார்த்தை தேடி
தமிழில் வார்த்தை கொஞ்சம் என
ஒருவரியில் பொய்சொன்ன
பொல்லாதவன் நான் ..!

துணையாய் இருப்பாயென நம்பி
தோள்கொடுத்த
தோழனை தூக்கியெறிந்து
தனிமையில் தவித்த
துரதிர்ஷ்டசாலி நான் ..!

நெஞ்சம் செய்யும்
கபளீகரத்தில்
தாயின் நெருடலை
தொல்லையென்றொதுக்கிய
துர்மனக்காரன் நான் ..!

மொத்தத்தில்
காதலுக்காக
வாழ்வை இழந்து
காதலிக்காக
என்னை இழந்த
உதாரணவாதி நான் ..!



-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

அந்த நாள்...!



அதிகாலை மல்லிகையை
பறித்துவந்து அதில் வழிந்த
சொட்டுப் பனித்துளியை
நுனிவிரலில் ஏந்தி
இனிக்கிறது தேன் என்று சொன்ன
அந்த நாள்…


ரயில் பாதையில்நான்
ஓடி விழுந்தபோது
உன் கைக்குட்டையில்எச்சில் தடவி
ஒத்தடம் கொடுத்த
அந்த நாள்…


கரப்பானுக்கு பயந்து
கூரையில் ஏறி
தவறி விழுந்ததாய்
நீ கண்ட கனவை
நள்ளிரவில் தொலைபேசியில் கூறி
என் கனவைகலைத்த நாள்…..

யாரோ ஒருவன்
வீதியில் இறந்துகிடக்கஅருகில்
அவன் மனைவிஅழுவதைப்பார்த்து
என்னைக்கட்டிப்பிடித்து
எப்போதும் என்னுடன் இருப்பாயா என
ஏக்கத்துடன் கேட்ட நாள்…

மாமாவுடன் பேசியபொழுது
இடையில் என்பெயரைக் கூறி
நீ தடுமாறித் தவித்ததைஅதே பயத்துடன்
மழலை மொழியில்கூறிய
அந்த நாள்…

நகம்கடிக்கும் பழக்கத்தைவிடச்சொல்லி
நீ விரல்கடித்துக்கொண்டு
அழுதுத் துடித்த
அந்த நாள்…

எப்போதோ நாம்ஒன்றாய் பயணித்த
பயணச்சீட்டைபத்திரப்படுத்தி
அடுத்தவருடம் அதே தினத்தில்
முத்தம்கொடுத்தாயே
அந்த நாள்…

இவை அத்தனையும்॥
ஏன் இன்னும் எத்தனையோநினைவுகளை
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்…

யாரோ வைத்த கண்ணிவெடியில் - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிதறிப்போனதைத் தவிர…।

-ஆர்.நிர்ஷன

விரிவாக படிக்க ……..