இயற்கையும் காதல்கொள்ளும்..!

சூரியக் காதலன்
எங்கேயென
மின்மினிகளை ஏவித்
தேடுகிறாள் பூமிப்பெண்
காரிருளில்
கண்ணுக்கெட்டாத்தூரம் சென்று
கண்ணயர்ந்துவிட்டானோ என
தென்றலையும்
தூதனுப்புகிறாள்
“எங்கே போனாலும்
அள்ளியணைக்க
வரத்தானே வேண்டும்
அப்போது கிள்ளி இழுத்து
கோபம் தீர்க்கிறேன்”
என
அவனை எதிர்பார்த்தே
நிசப்தமாய் நினைவிழந்து
தூங்குகிறாள்
கழிகிறது நேரம்…
மறுபொழுதில்….
தன்னவளை ஆக்கிரமித்த
பனித்துளிகளை
இமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு
தூங்கும் பெண்ணை
துயிலெழுப்புகிறான் ஆதவன்…
காதலனைக் கண்ட களிப்பில்
கோபம் மறந்து
குதூகலித்து
வாரியணைக்க முற்படுகையில்
அந்தோ…..
நொடிப்பொழுதில் முந்திக்கொண்ட
முகிலவன்
முன்னதாய் முத்தமிடுகிறான்…
முத்தத்தின் தகப்பில்
உணர்வுகள் உயிர்க்க
மிதம்கொண்டு மௌனித்து
மேனிசிவக்கிறாள் அவள்…
உச்சிமுதல் சிவந்ததில்
வானம் நிறந்து நிறைகிறது
ஓ…
காதலர்களின்
புணர்தலைக் கண்ட சேவல்
கூவிக்கூவி கூட்டம் கூட்டுகிறது
விடயம் அறிந்த
விண்மீன்கள்
வெட்கத்தில் மறைய
சல்லாபம் காண
கூடுவிட்டுப் பறக்கின்றன
பறவைகள்
மீள்நினைவுடன் மீண்டெழுகிறாள்
நாணத்தோடவள்...
எப்போதும் என்னோடிருவென
காதலனுக்கு உத்தரவிட்டபடி!
-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.
