Todays Date:

காதலின் ஆட்சி!

ஓயாத கடலுக்கு அருகில்
பேசாத மொழிகளோடு
நாம்!

கரையோரம் நின்றிருக்கிறாய்
பாதங்களை
நுரைகளால் அர்ச்சிக்கின்றன
அலைகள்!

இப்போது பூத்தது போல
எப்போதும்
மலர்ந்திருக்கிறாய்

அதிர்ஷ்டக்க் காற்று…
மோகம் கொண்டு
கூந்தலை
முகர்ந்து
கலைத்துவிடுகிறது

உன் புன்னகையால்
பிரகாசிக்கிறது – என்
முகம்

மெல்லத் துளிர்கிறது
தாபம் - அதை
சொல்லத் துடிக்கிறது
ஆவல்

வார்த்தைகள் கரைந்து
மிஞ்சுகிறது
மௌனம்

உன் மொத்தக் காதலும் - என்
ஜீவனில்
இழையோடுகிறது

நீலவானம்
நீள்வெளிக்கு மத்தியில்
தனியொருத்தியாய்
என்னை ஆள்கிறாய்

அஞ்ஞாதங்களைத் தகர்த்தி
உன்னிடம்
அபயம் வர
பிரியப்படுகிறேன்

உன் பார்வையை ஏந்தி
புன்னகையைப் பருக
தவமிருக்க வேண்டுமடி
கண்மணி!

-இராமானுஜம் நிர்ஷன்-
08.12.2017

விரிவாக படிக்க ……..

காவியத்தின் தேவதை!



நீண்ட இரவின்

மத்திமத்தில்
நிலவும்
நிழலும்
மழையும்…

ஏகாந்தத்தில்
உன்னை
ஏந்திக் காத்திருக்கிறேன்

சிற்றெறும்பு வீழ்ந்து
இலையதிரும் ஓசை
என்னை
இயங்கச் செய்கிறது

என் மனதின்
திறக்கப்படாத காப்பகம்
மெல்ல விரிகிறது

உனக்கு நினைவிருக்கிறதா?

பதின்ம வயதுகளில்
அழகைச் சுமந்த
நீயும்
வேட்கை நிறைந்த
நானும்…

நீ
கண்களால் அபிநயிப்பாய்
நான்
இமைக்க மறந்து
பார்த்திருப்பேன்!

நீண்ட மௌனத்தின்பின்
முதல் வார்த்தை
உதிர்ப்பாய்
நான்
முழுவதுமாய் தாங்கி
சேமித்திருப்பேன்!

நாம்
பேசாத பொழுதுகளில்
பரிமாறிய வார்த்தைகள்
இப்போதும்
இனிக்கின்றன!

அவை - நம்
மனதின்
மையங்களை இணைத்த
மந்திரச் சொற்கள்!

காதல் பாடல்களில்
கற்பனையாகியிருந்தோம்!

சில சந்திப்பு
பல கதை
சிறுதூர நடைகளில்
நாமாகிப்போனோம்!

உன்
நினைவுக் கடலில்
திமில்போல்
மிதந்திருக்கிறேன்!

இன்னுமின்னும்
வாழவேண்டுமென்ற
ஆவலைத் தந்தது - உன்
காதல்!

என் காவியத்தின்
தேவதையாய் - உன்னை
ஆராதித்திருக்கிறேன்!

உன்னை
அள்ளிக் கொள்ளவே -
என் உடல்
உயிர் தாங்குகிறது போலும்!

என் வாழ்க்கையின்
கிழக்கு நீ
இங்கே அஸ்தமனத்துக்கு
இடமில்லை!

வா!
இந்த இரவில்
இந்த நிலவில்
இந்த மழையில்
ஒருவராகியிருப்போம்!

-இராமானுஜம் நிர்ஷன் -

விரிவாக படிக்க ……..

கூட்டு ஒப்பந்தம்: தடைகளை தகர்க்க இளைஞர்கள் முன் வர வேண்டும்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், தொழில்நலன் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் பற்றி இப்போது மிக அரிதாகவே பேசப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரபரப்பாக பேசப்படுவதும் நல்லதோ கெட்டதோ அதன் பின்னர் அமைதியாகிவிடுவதும் வழமையாகிவிட்டது.
மனித வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரச்சினைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதன் ஊடாகவே சாதகமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
அதனை விடுத்து பிரச்சினை சார்ந்த அனைவரும் அமைதியாக இருப்பதானது மாற்றுத் தரப்பினருக்கு வலுவூட்டுவதாகவே அமையும்.
கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் பேசுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஊடகங்களால் தேடப்படும் விடயமாக மாறும். அதன் பின்னர் என்னவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
எனினும் அது சரியா, பிழையா என்பதற்கு அப்பால் அனைவரும் ஒருமித்த மனநிலைக்கு வரவேண்டியது அவசியமாகும். அதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஒவ்வொரு தனித்தனி தொழிலாளரும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
அவ்வாறு விழிப்புணர்வூட்டும் செயற்பாடானது இதுவரை நடைபெறாமை கவலைக்குரியதே.
கூட்டு ஒப்பந்தமானது ஒன்றரை வருடங்களுக்கு அதிகமாக காலதாமதப்படுத்தப்பட்ட போது அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வகையில் ஏனையோர் மீது குற்றம் சுமத்திவந்தனர்.
ஆயிரம் ரூபா சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுத்தர முடியாது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இற்கு தெரியாத விடயமல்ல. இத்தனை காலம் தொழிற்சங்கம் நடத்தி கூட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டு வந்த அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
அரசியல் இலாபத்துக்காக தேர்தல் நலனுக்காக ஆயிரம் ரூபா பெற்றுத்தருவோம் எனக் கூறிவிட்டார். அதுவே அவருக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது.
சாதாரண தொழிலார்கள் தானே எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனப்பாங்கு ஈற்றில் சஞ்சலத்தை ஏற்படும் விதமாக மாறியது.
அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்க பலத்தில் இருந்தாலும் தற்காலிக கொடுப்பனவையே பெற்றுக்கொடுக்க முடிந்தது.
தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுவதாக இருந்தாலும் கூட முறையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமானால் நியாயமான தொகையை பெற்றுக்கொடுத்திருக்க முடியும்.
இங்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தானே ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக சொன்னார்கள், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என நழுவிச்செல்லும் மனப்பாங்குடனேயே கூட்டணியினர் செயற்பட்டிருந்தார்கள்.
ஆக, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பிலிருந்தும் அறிக்கை வந்தனவே தவிர அதற்குப் பின்னரான பின்விளைவுகள் குறித்து கரிசனை கொள்வோர் யாருமிலர்.
நிலுவைப் பணத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்புடையதாக இ.தொ.கா. முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக கொழுந்து பறிக்கும்படி பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு தொழிற்சங்கங்கள் கூறும் பதில் என்ன?
இன்னும் சில தோட்டக்கம்பனிகள் குறைவான வேலைநாட்களையே வழங்குகின்றன. இது குறித்து தொழிற்சங்கங்கங்களுக்கு தெரியுமா?
தேயிலை காணிகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் முறை பற்றி பேசப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கிறது?
இது ஒருபுறம் இருக்கட்டும். 
நாட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் குழுக்கள் அமைத்து விசாரணை அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
ஆனால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் பின்னணி என்ன?
நாட்டின் வருமானத்தில் பிரதான வகிபாகம் கொண்டுள்ள தொழிலாளர்களின் நலனில் ஜனாதிபதிக்கு ஏன் அக்கறை இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்பட்டாலும் முதலாளிமார் நாட்டுக்கு ஈட்டித்தரும் செலாவணி குறித்தே அதிகம் கவனம் எடுக்கப்படுகிறது. இத்தனை நூற்றாண்டு காலம் உழைத்து உழைத்து அதே மண்ணுக்கு உரமாகிப் போகும் தியாகிகள் குறித்து சாதாரண மனிதனின் மனிதாபிமானத்துடான பார்வை அதிகாரம் மிக்கவர்களுக்கு தெரியாது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இதனை கதைத்து பிரயோசனம் கிடையாது. ஆதலால் இதற்கு சமூக ரீதியாக சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம் குறித்து அக்கறையுடையவர்கள் ஒன்றுதிரளும் பட்சத்தில் சம்பள விவகாரத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மாற்றத்துக்காக உழைக்கும் இளைஞர்கள் பேதங்களை மறந்து இந்த விடயத்தில் திறந்த கலந்துரைரயாடல்களை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக காத்திரமான சிந்தனைகளை உருவாக்கி செயற்படுதலே இன்றைய காலத்தின் தேவையாகும்.

வெறும் சம்பளம் என்று பார்க்காமல் அது எமது மக்களின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணி என்று நோக்கப்பட்டு ஒரு படையணி உருவாகுமானால் அத்தனை தடைகளையும் உடைப்பது சிரமம் கிடையாது.

-இராமானுஜம் நிர்ஷன்-
நன்றி சூரியகாந்தி - 14.02.2017

விரிவாக படிக்க ……..

வா.. நெஞ்சத்தின் அக்கிராசனத்துக்கு!

கிளைகள்
குடைபிடிக்க
கீழே
சாய்ந்திருக்கிறாய்

மலர் விழுந்த சோகம்
மரத்துக்கு!

காணும் பொழுதில்
துருவப் பனியாய்
உறைகிறேன்!

பற்றிப் படர்கிறது
காதல்
மெல்லப் பனிகிறது
மோகம்

உருவாகி
கருவாகி
துளிர்க்கிறது தாகம்!

அலைபோல் புருவம்
நாணம் சுரக்கும்!
கருவிழி அசையும்
காந்தம் பிறக்கும்!

அள்ளிக் கொள்கையில்
வினைச்சொல்
உதிரும்!

கண்களின்
கபளீகரத்தை காண்கையில்
உளிதட்டுகிறது
இதயம்!

அணைந்து பிணைந்து
மேவிக் கணையாகி
காதல் பருகுவோம்
வா!

பருகிச் சுவைத்து
மூர்ச்சை இழுத்து
முடிவிலி காண்போம்
வா!

மொத்தமாய் கவர
வித்தைகள் புரிய

தொடுகையில் உணர
நெடுமையாய் ஆள

சத்தம் தவிர்த்து
பித்தம் நிறைக்க

தேவதை உன்னை
காதலோடு அழைக்கிறேன்
என் நெஞ்சத்தின்
அக்கிராசனத்துக்கு!

-இராமானுஜம் நிர்ஷன்-

விரிவாக படிக்க ……..