Todays Date:

குதூகலமான வாழ்க்கைப் பயணத்துக்கு புரிதலுடனான உறவுகளின் அவசியம்


வாழ்க்கை எனும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறோம். மனதிற்குப் பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்க முயற்சிக்கிறோம்.

சந்தோஷமாயினும் சரி துக்கமாயினும் சரி புரிதலுடனான ஓர் உறவின் அல்லது உறவுகளின் அவசியத்தினை மனம் எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும்.

மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய, இன்பங்களில் பங்கெடுத்து துன்பங்களில் தோள்கொடுக்கக்கூடிய, எப்போதும் எம் ஆற்றலை வலுப்படுத்தி குறைகளை நிறைகளாக்கக்கூடிய உறவுகள் கிடைக்கப்பெறுவதானது அதீத சந்தோஷத்தை தரக்கூடியது எனலாம். அந்த உறவுகள், தாய் தந்தை, சகோதரகளாகவோ, உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, தொழில்நிலையானவர்களாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம்,

சிலர் குறைவாக பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல்போகும். மேலும் சிலர் சந்தித்திருக்கவே மாட்டார்கள் ஆனால் மிகச்சரியான புரிதல் இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? ஆம்! புரிந்துணர்வு எனக் குறிப்பிடுகையில் முதல்நிலையில் வைக்கப்படுவது நம்பிக்கை தான். அது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பத்திரம். நம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக இருக்கையில் அங்கு எதுவித சந்தேகங்களுக்கோ அல்லது தவறான நடத்தைகளுக்கோ இடமிருக்காது.

நிறைவான பாசத்தோடான பயணம் அனுமானிக்க முடியாத ஆனந்தத்தை தரவல்லது. ஆனால் அதே பாசம் இடைநடுவில் உடையுமாயின் அதன் வலிகளின் ஆழமும் அதிகம். மனதில் ஏதோ ஒரு உருவற்ற புள்ளியாய் எல்லாசந்தர்ப்பங்களிலும் அந்த வடு வாட்டிக்கொண்டிருக்கும்.

ஆதலால் உறவுகள் தேவைப்படும் அதேவேளை அதற்கேற்ற புரிதல்களும் அவசியமாகிறது.

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அன்பு,விட்டுக்கொடுப்பு ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பை விட சிறந்த ஆயுதம் இல்லை என்பார்கள். எதையும் அன்போடு அனுகும்போது அதன் பிரதிபலனும் அன்பாகவே கிடைப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருப்போம். பரிமாணங்கள் பலவற்றோடு பிறருக்கு கொடுக்கக்கூடிய உயரிய சந்தோஷமான அன்பினை எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பகிர்தல் வேண்டும். அன்பு நிறைந்த தூய உள்ளம் இறைவன் வாழும் திருக்கோயில் என்று சொல்லப்படுவதுண்டு.

அதேபோல் விட்டுக்கொடுப்பதிலும் நிறைவான திருப்தியை காண முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும்போது மனம் இலகுதன்மையை உணரும். இது காலப்போக்கில் சுவையான சம்பவங்களை மனதில் இருத்திக்கொள்ளவும் உதவும். நெருக்கமான உறவுகளை விரிசல் இன்றி பேணுவதற்கு விட்டுக்கொடுப்பு அவசியமாகும்.

நல்ல உறவுகளில் விரிசல் ஏற்படுமாயின் அல்லது விரிசல் ஏற்படுவதற்கான காரணம் தெரியுமாயின் வாய்விட்டுப் பேசுவதே சிறந்தது. தவறான மதிப்பீடுகளிலிருந்து விலகிக்கொள்ளவும் நியாயமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அதிலும் குறிப்பாக கோபங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவருக்குப் புரியும் வகையில் அமைதியாக எடுத்துக்கூற வேண்டும்.

நாம் பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கும்போது அனைத்துமே பச்சையாக தெரிவதுபோல சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது அவ்வாறே தெரியும். ஆதலால் அவற்றிலிருந்து விடுபட வெளிப்படையாக பேசித் தீர்மானிப்பது சிறந்தது.

வியட்நாமியக் கதை ஒன்றை உதாரணமாக குறிப்பிட நினைவுக்கு வருகிறது. ஓர் இராணுவ வீரரும் அவருடைய மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்துவருகின்றனர். நாட்டில் யுத்த நிலைதோன்றப்போவதாக எச்சரித்து அவசரமாக களத்துக்கு திரும்பும்படி வீரருக்கு அழைப்புவருகிறது. அவர் கிளம்பும்போது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். அழுகையுடனும் சோகத்துடனும் இராணுவவீரர் விடைபெறுகிறார். கணவன் நிச்சயமாக வீடுதிரும்பவேண்டும் என மனைவி பிரார்த்தித்துக்கொண்டு காலம் கழிக்கிறாள். மூன்று ஆண்டுகள் ஓடி மறைகின்றன.

போர் முடிவடைந்து இராணுவவீரர் மட்டட்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார். மனைவி விமானநிலையத்தில் குழந்தையோடு சென்று குது}கலத்தோடு வரவேற்கிறாள். வீட்டுக்கு வந்ததும் கணவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை சமைத்து களிப்போடு பரிமாறுகிறாள் மனைவி.

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், குழந்தையைப் பார்த்து “தந்தையுடன் பேசாமல் ஏன் அமைதியாக இருக்கிறாய்?” எனக் கேட்கிறாள். அதற்கு குழந்தையோ “இவர் என் அப்பா இல்லை” என்கிறது. இராணுவ வீரருக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. குழந்தை அப்படி சொன்னதற்காக காரணத்தை வினவுகிறார். அதற்குப் பதிலாக “ என் அப்பா எப்போதும் அம்மாவின் அருகில் இருப்பார். அம்மாவுடன் கடைக்கு வருவார்” எனக் கூறுகிறது குழந்தை.

மனைவி ஆசையுடன் சமைத்துவைத்திருந்த உணவை ஒருபக்கம் து}க்கியெறிந்துவிட்டு கோபத்தில் கண்டபடி மனைவியை திட்டுகிறார் இராணுவ வீரர். அவருடைய சந்தேகம் கற்பனையையும் தாண்டி பயணித்துக்கொண்டிருக்க பல நாட்களாக மனைவியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. இப்படியிருக்கையில் சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொள்கிறாள்.

சில நாட்கள் கழிந்த பின்னர் தன் குழந்தையுடன் அவர் கடைக்கு சென்றுகொண்டிருக்கிறார். அப்போது தந்தையின் நிழலைப் பார்த்து “அதோ அவர்தான் என் அப்பா” என்று கூறுகிறது. அதிர்ச்சியடைந்த இராணுவ வீரர் குழந்தையை அன்பாக விசாரிக்கிறார்.

ஆம்! குழந்தையின் தந்தை போருக்குப் போயிருக்கிறார் என்பதை கூறவிரும்பாத தாய் தன்னுடைய நிழலையே தந்தை என குழந்தைக்கு விளையாட்டுத்தனாக சொல்லிக்கொடுத்திருக்கிறாள். அதை சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த வினை எவ்வளவு பெரிது என்பதை அந்த வீரர் உணர்ந்து அழுகிறார்.

அளவுக்கு மீறிய சந்தேகமும் அதை வெளிப்படையாக பேசாததாலும் இந்த இழப்பு ஏற்பட்டது. குழந்தை சொன்னதைக் கேட்டு மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். இதற்கு மரணம் தான் வழி என்றில்லாமல் மனைவி ஏதோ ஒரு வகையில் கணவனுக்கு விடயத்தை விளக்கியிருக்கலாம்.

ஆக, இவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உறவுகளோடு எதையும் நிதானமாக பேசித் தீர்ப்பது மேலானது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரில் அல்லது பலரில் தங்கிவாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் உணவு, உடை உட்பட அனைத்துத் தேவைகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் உதவி தேவைப்படுகிறது.

உறவுகள் எமக்கு அவசியம். தனியான வாழ்க்கைப் பயணத்தை விட காத்திரமான நல்ல உறவுகளோடு வாழ்க்கையைத் தொடருவது தேகத்துக்கும் இதயத்துக்கும் நிறைவான மகிழ்ச்சியைத் தரும். ஆதலால் உறவுகளில் விரிசல்கள் ஏற்படாவண்ணம் சிறந்தமுறையில் கட்டிக்காத்து ஆனந்தமான பொழுதுகளை அனுபவிப்போம்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

எனக்குள்…அழகோடு கடவுள், காதல், பணமும் சேர்ந்து…

அழகு, கடவுள், காதல், பணம் - இந்தத் தொடருக்கு என்னை அன்போடு அழைத்து பரிசையும் தந்த தம்பி கோபிக்கு நன்றிகள். மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தாக்கியிருக்கிறேன்.

அழகு
அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.

கடவுள்

உயிர் இருக்கிறதா எனக்கேட்டால் ஆமாம் என்கிறோம். காட்ட முடியுமா என்றால்??
ஏதோ ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு கடவுள் என நாம் பெயர்வைத்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் மனிதனுடைய தேடல்கள் வெளி உலகத்தை நோக்கினவாக இருக்கின்றன. வளங்களைக் கொண்டு புதிதாக என்ன செய்யலாம்? ஏதை உற்பத்தியாக்கலாம்? என்றெல்லாம் நினைக்கிறோம்.
ஆனால் அதேபார்வையை உள்நோக்கி செலுத்துவோமானால்…. அங்கும் ஏராளமான வளங்கள் உண்டு. நினைத்துப்பார்க்க முடியாத பலவற்றை சாதிக்கலாம்.
நானும் அதை உணர முற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
“அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.

காதல்

காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது

காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது

காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

பணம்
இந்தக்காலத்தைப் பொருத்தவரையில் குணத்தை விட பணத்துக்கே பலம் அதிகம். “பணம் பத்தும் செய்யும், குணம் என்னத்தச் செய்யும்?” எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.
பணம் ஒரு போதை – சரியாகக் கையாளாவிட்டால் ஆளை மூழ்கடித்துவிடும்.

இந்தத் தொடருக்கு நான் இருவரை அழைக்க விரும்புகிறேன்। ஊடகத்துறையில் சமூகத்துக்காக அக்கறையுடன் துணிந்து செயலாற்றுபவர்கள் குறைவு. அவ்வாறு செயற்படுபவர்களின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியவர் சிவலிங்கம் சிவகுமாரன். தாண்டவத்திற்கு சொந்தக்காரர்.இவருடன் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. சிவகுமாரனின் எழுத்துநடையையும் உலக அறிவையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய ஆக்கங்களை தொடர்ந்தும் வாசித்துவருகிறேன். குறிப்பாக ஆங்கிலத் திரைப்படங்களை தனக்கே உரித்தான பாணியில் விமர்சனம் செய்வார். அன்புக்குரிய சிவா அண்ணாவை தொடருக்கு அழைக்கிறேன்.

பகீ - “ஊரோடி” பக்கத்துக்கு சொந்தக்காரர். தொழில்நுட்பம்,இணையம் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சிவாய்ந்த திறமையாளர். மாயா,வந்தி ஆகியோருடன் இணைந்து 2008 இன் ஆரம்பத்திலிருந்து பதிவர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆவலாக இருந்தவர். நல்ல நண்பர். அதிகம் வேலை காரணமாக அண்மைக்காலமாக பதிவைக் காணவில்லை. ஒருவிடயத்தை பலகோணங்களிலிருந்து பார்க்கக் கூடிய பகீரதனை அழைக்கிறேன்.

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா (०३)

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்।

--------------------------------------------------------------------------------------------------------
ஆமாம்!
யாருக்கும் சொல்லாமல் அவளை படிக்கத் தொடங்கினேன். தோழியரோடு சிரிப்பதை ரசிக்கத் தொடங்கினேன். என்னைப்போலவே அவளுக்கும் தனிமை ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்றாய் இருந்த பொழுதுகளில் அவள் அசைவுகளை மட்டும் தனியாக பிரதியெடுத்துக்கொண்டது மனம்.

அதெப்படி? எந்தவகையில் அவள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்? ஏன் நான் இப்படி காரணம் புரியாமல் அவள்மீது ஈர்ப்புக்கொள்கிறேன்?

அவளுக்கேயுரிய திறமை பெருஞ்செல்வம். அவள் அமைதி மற்றோர் மனதிலும் பேரமைதியை ஏற்படுத்துகிறாள்… உண்மையில் இயற்கையோடு உற்றுநோக்கி அதனை, ஒப்புவித்த முதல் பெண் பிரியா.

பொறுமை தான் நான் அவளிடத்தில் வியந்த முதல் குணம், நடத்தையிலும் பழக்கத்திலும் தூய்மையாக இருந்தாள், அவள் படிப்பும் ஈடுபாடும் உயர்வை நோக்கியதாகவே இருந்தன, மற்றோருக்கு உதவுவதிலும் பங்குகொள்வதிலும் பரந்த மனதை நிறைவாகத் தன்னகத்திருந்தாள், தீய நோக்கத்தோடு நெருங்குவோரை நொடிப்பொழுதில் மாற்றியமைத்தாள்.

நிலம் - பொறுமை
நீர் – தூய்மை
ஆகாயம் - உயர்வான சிந்தனைகள்
காற்று – பரந்த மனம்
தீ – தீயவற்றை அழித்தல்

(பெண்கள் பஞ்சபூதங்களுக்கும் ஒப்பானவர்கள் என சொல்லப்படுவதன் ஆத்மார்த்தம் இதுதான். இப்போதுள்ள எத்தனை பெண்களுக்கு இவற்றின் அர்த்தம் தெரியும்?)

அவள் அனைத்திலும் நிறைவானவள். ஏதோ ஓர் உறவுநிலையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை அவதானித்து அல்லது அவளோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பதை நான் அப்போதே முடிவுசெய்தேன்.
அவள் திரும்பிப்பார்ப்பாள் என செய்த குறும்புகள் ஏமாற்றத்தை தந்தன.

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்.

கறுப்பு வேலி
நிலையாமை நிலையானது என்பார்கள்। உண்மை தான்। இத்தனை நாளும் மனதோடு மணமாக இருந்தவள் எங்கோ மாயமாகியிருந்தாள்.

அடைமழையிலும் கதிர் வருமென காத்திருந்த மொட்டின் மீது இடிவிழுந்ததாய் மனம் சிதறிப்போனது.

இனிமேல் சந்திக்க முடியாது என்பதையும் கேட்டு அறிந்தபோது எனது வலிகளின் தாக்கத்தை வரிகளில் கூறிவிட முடியாது.

ஆகாய உயரத்துக்கு இருந்த பெருமலையொன்று அக்கினிச் சுவாலையாய் எரிந்து என்னை அணைத்துக்கொண்டது போல…

காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. எனக்கும் அவளுக்குமிடையிலான இடைவெளி பெருகாமலும் குறையாமலும் எனக்குள். ஆனால் அவள்???

எங்கோ சென்றிருந்த அவளை எப்படியோ கண்டுபிடித்த போது பாலைவனத்துக் கள்ளிச்செடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்வது போலிருந்தது எனக்கு.

அவள்... என்னை விட்டு வெகுதூரம் போயிருந்தாள். நினைக்கமுடியாதளவுக்குப் போயிருந்தாள்.
அவளுக்குள் ஏராளமான திறமைகள் கொட்டிக்கிடந்ததாய் ஏற்கனவே கூறியிருந்தேன். அவற்றை சரியாகப் பிரயோகித்திருந்தாள் போலும்.

காலம் சரியான மருந்து என்பார்கள். அந்தக் காலம்தான் அப்போது அவளுக்குள் காதலையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால்….

அது என்னோடல்ல….

என் காதலைச் சொல்லாதது எத்தனை தவறு? எனக்குள் பிரசவித்து முளைத்து பூத்துக் குலுங்கி,பூப்பெய்தி மணம் பரப்பிய காதலை எந்தத் தொட்டிலில் கொட்டுவது?
உயிரின் ஆழம்வரை ஆணிவேராய் ஆக்கிரமித்து உணர்வுகளுக்குள் வேர்பரப்பியிருந்த காதலை எந்தக் கத்தி கொண்டு அறுப்பது?

“முடியாது” என முரண்பிடிக்கும் மனதின் கொடூர வெப்பத்தை தாங்க முடியாத காதல்கனங்கள் கண்ணீராய் உருமாறி காணாமல் போயின.

அப்போது நிகழ்ந்தது எதிர்பாராத அவளுடைய சந்திப்பு. பத்து வருடங்களுக்குப் பிறகு….

(தொடர்ந்தும் பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

ஓர் உண்மை வாசகம்


கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்

மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…

பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…

உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….

இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது

மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்

கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்

கோடி பூக்களோடு
நீ – என் வானில்

பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு

‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா (02)

"சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது. சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்"

------------------------------------------------------------


1996.

நான் இயற்கையை முழுமையாக ரசிக்கத் தொடங்கிய காலம் । இயற்கைக்கும் மனிதனுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை தனிமையில் பலதடவைகள் சிந்தித்திருக்கிறேன்.

நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பதை தோண்டித் தோண்டிப் பார்த்த ஆவல்மிக்க அந்திநேரங்களை மறக்க முடியாது.

அதிகாலைச் சூரியன், சில்லென்ற காற்று, காட்டுச் சேவலின்கூவல், வீட்டுக்கு நேரேயிருந்த மலைமுகடு, அங்கு ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட காட்டு மரங்கள், புறாக்கூடு, உச்சியிலிருந்து பார்த்தால் தெரியும் அம்மன்கோயில், புல்வெளியற்ற மைதானம், தென்னைமரத்தடி, நிலாச்சாரல் என இன்னும் எத்தனையோ ஆலாபனைகள் என்னை இயற்கையின் மடியோடு கண்ணிமைக்கச் செய்திருந்தன.

மனிதனுக்கு பெருஞ்செல்வத்தையும் பேரமைதியையும் தருவதில் இயற்கை தவிர்ந்த பெருங்கொடை வேறெதுவும் இல்லை.

காலம் தள்ளிப்போய் முதல் பருவங்களை கடந்தபோதுதான் அறிந்தேன். இந்த இயற்கைக்கும் “பெண்” என்ற படைப்புக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்பதை.

அதுவும் பள்ளிப்பருவத்தில்…

பெண்ணுக்குள் பெருஞ் செல்வம் அடங்கியிருக்கிறது. அதைக்கொண்டு அவளால் பேரமைதியைத் தரமுடியும்.

1997.

“பிரியா”
பள்ளியில் அவளுக்குத்தான் முதலிடம். அவளருகில் நிற்பதற்குக் கூட போட்டிபோட்ட நாட்கள்…. திறமையும் ஆளுமையும் கடவுள்கொடுத்த கொடை.
அதற்கும் மேலாக…. அவள் அழகு!

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।

பிரியாவின் அசைவுகளும் ரசனைமிக்கன. வெறுமையுற்ற பொழுதுகளில் அவளை கவிதையாகக் கீறி மனதில் செதுக்கிக்கொண்டேன்.

சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது। சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அசைவுகளால் வசியச்செய்யும் அவள், அவளுக்கே தெரியாமல் என்னுள் சிற்பமாகிக்கொண்டிருந்தாள்.

"வானம் அந்திப்படும்பொழுதிலும்
உன் வருகை எனக்கு விடியலைத் தருகிறது

எதேச்சையாகக்கூட பார்க்கமாட்டாயா?
காதல் விமோசனத்துக்காக எத்தனை நாள் காத்திருப்பது?

இந்த விடலை நினைவுகள் விதையாக்கப்படுமானால்
வளர்ந்த பின் விருட்சத்தை எப்படி வீழ்த்துவாய்?

காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"

இவை,அவள் நினைவுகளால் என்குள் பிரவித்தவை.

அவள்மீது காதல் கொள்ளவில்லை. மாறாக ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்குள் இருப்பதாயும்
அது அன்பின் நிலைகள் எல்லாவற்றையும் தாண்டியதாயும் உணர்ந்தேன்.

அமைதியில் அமைதி இருக்கிறதென்பார்கள். தியானத்துக்காக கடவுள் சிலைகளை பார்த்திருப்பதன் யதார்த்தம் இதுதான். அமைதியிலிருந்துதான் அமைதி கிடைக்கிறது என ஓஷோ சொல்லியிருக்கிறார்.
"இல்லாததிலிருந்து உள்ளது தோன்றாது. உள்ளதிலிருந்து தான் உள்ளது தோன்றும்" என்கிறது சித்தாந்தம். அவள் அமைதியிலிருந்து எனக்கும் அமைதி பிறந்தது.

அவள் அதிகமாகப் பார்த்த இடம் அவளுடைய பெருவிரலாகத் தான் இருக்க முடியும்.

மனதின் மையப்புள்ளிகளை அறியமுடியவதில்லை. ஆழமான சோகத்திலும் அளவுக்கதிகமான சந்தோஷத்திலும் நிறைவாக மனம் களித்திருக்கும் வேளையில் எந்தச் செயல்கள் செய்தாலும் அந்த சோகமோ சந்தோஷமோ மனதின் ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து நம்மை வளப்படுத்துவதாய் உணர்ந்திருப்போம். அது அதிகமாய் உணரப்படுவதற்கு சிரமமானது.

அவளைப் பார்த்த பல பொழுதுகளில் அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நான் வாழ்ந்த காலங்கள்.
(தொடர்ந்து பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

“நிவேதப்ரியா” (01)


பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை. சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட, பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான் -

நிவேதன் எழுதத் தொடங்கிய வரிகள் இவை...

நிவேதன் - கொஞ்சம் அறிவோடு பேசுவதற்காகவே படைக்கப்பட்டவன் என பலர் சொல்வதுண்டு. நிவேதம் என்பதற்கு படைத்தல்,கொடுத்தல் என தமிழில் பொருளுண்டு. இது ஓர் உன்னதமான சொல்.
மனிதனுக்கு படைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் உணவு, சாப்பாடு என்கிறோம். அதனையே கடவுளுக்கு செய்தால் அதனை நிவேதனம் என்கிறோம்.
நிவேதனும் அவ்வாறுதான். படித்தது கொஞ்சமாயினும் கொடுத்தது அதிகம். அதாவது உழைப்பாளி. அப்படியென்றால் பிறருடைய சந்தோசத்துக்காக எதையும் செய்யக்கூடிய உழைப்பாளி.

நிவேதனுக்கு வயது 25. எழுத்தாளன்.

சோகங்களை, யாரிடமும் சொல்லமுடியாத வேதனைகளை எழுத்தில் வடித்து கிழித்துவிடுவது அவனுடைய வழக்கம். அப்படி அவன் எழுதிக் கிழித்தது ஏராளம்.

பண்டைய கிரேக்கர்கள் இவ்வாறானதொரு முறையை கையாண்டதாக கூறுவதுண்டு. அதாவது தமது பிரச்சினைகளை எழுதிக் கிழித்து ஆற்றிலோ அல்லது இனி தேடினாலும் அந்தக் கிழிஞ்சல்களை அண்டமுடியாத இடத்தில் போட்டுவிடுவர். அப்போது அந்த வேதனைகள் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போதும் பல சமயத்தவர்கள் நேர்த்திக் கடன் என செய்வதில் உள்ள உள்ளாந்த அர்த்தமும் இதுதான் எனத் தெரிகிறது.

பிரியா - இவள் மனைவியாகிவிடமாட்டாளா என ஏங்கிய கூட்டம் ஏராளம். மானிறம், கருவிழிகள், ஒருபுறம் குழிவிழும் மெத்தென்ற கன்னம், பலமடங்கு பள்ளத்தில் விழுந்தாலும் நேர்த்தி மாறாத காட்டாற்றுக்கூந்தல், மெல்லிடை, மேகமேனி என அவள் ஒரு காவியமாகத் திகழ்ந்தாள்.
உதயகாலப் பொழுதொன்றில் வெண்தேவதைகள் இணைந்து செதுக்கிய சிற்பம்போலானவளுக்கு அறிவும் திறமையும் ஆழமாய் நிறைந்திருந்தன. சிந்தனை, பேச்சு, நடத்தை அனைத்திலும் அவள் பாங்கும் பாணியும் தனியானவை. (நிவேதனின் எழுத்துகளில் பிரியா வரையப்பட்டிருக்கிறாள் என்பதற்காக இங்கு அதிகம் தரப்படவில்லை)

ஆண், பெண் என்றாலே அநேகர் பார்வையில் முதலில் தெரிவது “காதல்” என்பதுதான். இவர்கள் இருவரும் எப்படித் தொடர்புபடுகிறார்கள்? எவ்வாறு வாழ்வோட்டத்தில் கலக்கிறார்கள்? இதற்கும் சோக சம்பவங்களை கிழித்துவிடுவதற்கும் என்ன தொடர்பு? – நிவேதனின் வரிகள் தொடர்கின்றன…

பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை। சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான்.

சுகம் தான் வேதனைகளாக பரிணாமம் கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை எந்தச் சோகத்தையும் இவ்வளவு நேர்த்தியாக எழுதி நான் கிழித்ததில்லை. ஆனால் இதனை நிறைமனதோடு எழுதுகிறேன். ஏனென்றால் காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு பற்றி மனதுக்குள் ஊன்றிப்போனதை என் எழுத்துக்களால் மீட்டெடுக்கிறேன். மறக்க முடியாத பாழ்ய நினைவுகளுக்குள் மங்காத நினைவுகளாய் இன்னும் தொடரும் பலவற்றை கோர்த்துவிடுகிறேன். இங்குவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பிரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆனால்…. இதுவும் கிழிக்கப்படவேண்டியது.

(தொடர்ந்தும் பேசுவான்)

விரிவாக படிக்க ……..

"வேலை இல்லாதவேளை"


என் கறுப்புவானத்தை
ஊடறுக்கும்
வலிக்கும் தென்றல்!

மனவெளியெங்கும்
நெருப்பு சுவாசம்!

கறைபடிந்த பார்வைக்கோலங்களில்
குழிநிறைந்த தடயங்கள்!

தொட்டதெல்லாம் பட்டுப்போவதாய்
எண்ணங்கள்
விட்டுப்போகாமல் தொடரும்
துன்பங்கள்

இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்

உதவிக்கு அழைப்பதாயெண்ணி
தொலைபேசியை
புறக்கணிப்பவர்கள்
மறுபக்கம்

"வேலை இல்லையாமே"
கிண்டல் பேச்சுடன்
இன்னொரு கூட்டம்

"எப்படி இருந்தாய்?"
இறந்ததை
நினைவூட்டும்
எதிர்வீட்டின் சாட்டம்

"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்

“சனி நேரம்
கூடாத காலம்”
எதிர்பார்ப்புகளை சிதைக்கும்
வார்த்தைகளும் தாராளம்

மறுவேளை உணவுக்கு
மண்டியிட முடியாமல்
தடுக்கும்
தன்மானம்

“நம்பவைத்துக் கழுத்தறுத்தானே”
- ஈசனைத்தூற்றியழும்
மனோபாவம்

வேலை இல்லாதவேளை -
உணர்தலுடன்
ஒரு புரிதல்

இல்லாதவொன்றுக்கு
எல்லாவற்றையும்
காணிக்கைபடுத்திப்பார்த்திருக்கிறேன்
காலச்சுவடு
காயங்களை
ஆற்றுப்படுத்தும்வரை..!

-ஆர்.நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

விரிவாக படிக்க ……..

'அன்பு' எத்தனை மகத்தானது?















































விரிவாக படிக்க ……..

'வீர இளைஞர்களின் மகாத்மா'



12.01.2009 – சுவாமி விவேகானந்தரின் 146 ஆவது ஜனனதினமாகும்.

(பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும் - சுவாமி விவேகானந்தர்)

“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் வீரவரலாறு மிகச்சுவையானது. அவர் பட்ட கஷ்டங்கள் நேர்ந்த இன்னல்கள் எல்லாவற்றையும் உடைத்தெரிந்து மின்னிமிளிர்ந்து புதிய பாதைக்கு வழிகாட்டிய பெருந்துறவி.
எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் 146 ஆவது ஜனன தினம் நாளை அனுட்டிக்கப்படுகிறது.

நரேந்திரன் என்ற இளமைக்கால பெயர்கொண்ட சுவாமி 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்தார். சிறுபராயம் முதலே பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய நரேந்திரனிடம் காணப்பட்ட பிரகாசமான கண்கள் மகான் ஆகப்போவதை முன்னதாகவே சுட்டுவதாய் அமைந்திருந்தன.

கடவுள் எப்படிப்பட்டவர்? எப்படியிருப்பார்? எப்படிக்காட்சி தருவார்? போன்ற கேள்விகள் நரேந்திரனிடம் இயல்பாகவே காணப்பட்டன. காலப்போக்கில் இந்தக் கேள்விகளுக்கு விடைகண்ட பிறகுதான் மறுவேலை என்ற நிலைக்கு நரேந்திரன் மாறிவிட்டார்.
அப்போது சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேந்திரன் கடவுளைப் பற்றி அறிவதற்காக அவரிடம் செல்கிறார். நரேந்திரனைக் கண்டவுடனேயே முன்பலகாலம் நட்பிருந்ததுபோல பேசிய இராமகிருஷ்ணர், ‘உனக்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். ஏன் தாமதமாக வருகிறாய்? என்னோடு வா’ என அணைத்துக்கொள்கிறார். இராமகிருஷ்ணரின் தீர்க்கதரிசனத்தில் நரேந்திரனைப் பற்றி அவர் அறிந்துகொண்டார்.

அதன் பின்னர் கடவுளைப் பற்றி இராகிருஷ்ணர் கூறிய பல விடயங்கள் நரேந்திரனை சிந்திக்க வைத்தன. சில விடயங்களை நரேந்திரன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். எனினும் செயல்பாட்டு hPதியான குருவின் பாடத்தில் இறைவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் நரேந்திரன் சுவாமி இராமகிருஷ்ணரின் முதற்சீடராவதுடன் விவேகானந்தர் என்ற திருநாமத்தையும் பெறுகிறார்.

‘எனது மரணத்தின் பின்னர் எதைப்பற்றியும் கவலைப்படாது உலக மக்களின் விடிவுக்காகவும் இறையுணர்வின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பாடுபடுவதற்கு நீயே பொருத்தமானவன்’ என்ற தனது குருவின் வேதவாக்கிற்கிணங்க எல்லாவற்றையும் துறந்து தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வீறுகொண்டு சேவைசெய்யத் துணிகிறார் விவேகானந்தர்.

மகத்தான இறையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு. அதனை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் தத்துவ நோக்கம். வெறும் புத்தகங்களை படித்துக்கொண்டு கற்பனாவுலகத்தில் வாழ்வதில் அந்த இறையுணர்வு கிடைத்துவிடப்போவதில்லை. அந்த மகத்துவமான உணர்வு உணரப்படவேண்டிய ஒன்று. அவ்வாறு உணரப்பட்டவுடன் மனித சேவையே மனதில் முன்னிற்கும் என்ற கோட்பாட்டை அதிகம் வலியுறுத்திய விவேகானந்தர் இந்திய இளைஞர்களை தனது அறப்போராட்டத்தில் இணைவதற்கு அழைத்தார்.

பாரத நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க, வெறும் கமண்டலத்துடன் மட்டும் புறப்பட்டு பல்வேறு சேவைகளை செய்யத்தொடங்கினார். குறிப்பாக, மக்கள் சோம்பேறிகளாக இருப்பதையும் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதையும் உணர்ந்து அதற்கேற்றாற்போல் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செய்தார். ஆன்மிகம் சார்ந்த மேடைப்பேச்சுகளால் கவரப்பட்ட மக்கள் முற்றிலுமாய் மாறியதில் வெற்றிகண்டார் வீரத்துறவி.
இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து மக்களைப்பற்றி அறிந்துகொண்ட சுவாமி, தனது பயணத்தின் முடிவில் கன்னியாகுமரி சென்று கடல்நடுவே அமைந்த பாறை ஒன்றின் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்தார். பாரதத்தின் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் குறித்து தியானித்ததாக பின்னர் தான் எழுதிய நு}லில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

அன்னை சாரதையிடம் ஆசிபெற்று 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சிகாகோவில் இடம்பெற்ற சர்வமத மகாசபையில் இந்தியப் பிரதிநிதி என்ற வகையில் சுவாமி கலந்துகொண்டார். அங்கு ஆவர் ஆற்றிய உரையின் ஆரம்பமும் உரையும் அனைவரையும் ஏகமாக கவர்ந்திழுத்தது. மதத்தின் பெருமையையும் தாய்நாட்டுக்கான தனிமனிதனின் கடப்பாட்டையும் சமூகத்தின்மீதான சேவை நிலையையும் அங்கு தனது சிம்மக்குரலில் அமெரிக்காவில் பரப்பினார்.

சிகாகோவில் அவர் நிகழ்த்திய உரை பெரும் பிரசித்தி பெற்றதாகும். “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்” என்று சற்றும் பயமின்றி அவர் பேசினார்.

“விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்” என மதம்சார் கடப்பாட்டையும் விளக்கினார்.

இன்னும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கியிருந்து வேதாந்தம் பற்றிய பரப்புரைகளில் ஈடுபட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் கொழும்பிலும் தனது வீர உரையை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று உலகமெங்கிலும் கிளைவிரித்துப் பரப்பி சமுக சேவைகளில் முன்னிற்கும் இராமகிருஷ்ண மடங்களின் முதற்கர்த்தா சுவாமி விவேகானந்தரே. கல்கத்தாவில் மக்கள் சேவைக்கென தனது குருவின் பெயரால் இவர் உருவாக்கிய இராமகிருஷ்ண மடம் பின்னர் சேவைவிஸ்தரித்து இன்றும் மக்கள் சேவையில் ஈடுபடுகின்றமை நாம் அறிந்தவிடயம்.
‘எழுமின். விழிமின். கருதிய கருமம் கைகூடும்வரை அயராது உழைமின்’ என்ற விவேகானந்தரின் மகாவாக்கியம் இன்றும் இளைஞர்களின் வீரவாக்கியமாக உள்ளது.

இறைபணியுடன் தேசப்பற்றையும் ஊட்டிய சுவாமி 1902 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி முத்திப்பேறு பெற்றார். மிகக்கடுமையான உழைப்பினால் நோய்வாய்ப்பட்டமையே இவருடை இறப்புக்குக் காரணமாகும்.

வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகளேயாயினும் இந்த வீரத்துரவியின் ஆற்றல்மிகுந்த சமுதாயப் பணிகள் மிகப்பரந்தன. சுவாமியின் ஜனன தினத்தில் அவரது வழிமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் வழிநடப்பதே நாம் அவருக்கு செய்யும் கௌரவ மரியாதையாகும்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனையிலிருந்து சில:

• செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

• உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

• நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

• உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

• ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

-இராமானுஜம் நிர்ஷன்

நன்றி - வீரகேசரி வார வெளியீடு 11.01.2009

(சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தையொட்டி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு வீர இளைஞர்கள் தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. வீர சத்தியப்பிரமாணம், சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுடன் அறநெறி பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஆசிரியர்களுக்கு வீர இளைஞர் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முடியுமானால் கலந்துகொள்ளுங்கள்.

விரிவாக படிக்க ……..