Todays Date:

நிவேதப்ரியா (०३)

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்।

--------------------------------------------------------------------------------------------------------
ஆமாம்!
யாருக்கும் சொல்லாமல் அவளை படிக்கத் தொடங்கினேன். தோழியரோடு சிரிப்பதை ரசிக்கத் தொடங்கினேன். என்னைப்போலவே அவளுக்கும் தனிமை ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்றாய் இருந்த பொழுதுகளில் அவள் அசைவுகளை மட்டும் தனியாக பிரதியெடுத்துக்கொண்டது மனம்.

அதெப்படி? எந்தவகையில் அவள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்? ஏன் நான் இப்படி காரணம் புரியாமல் அவள்மீது ஈர்ப்புக்கொள்கிறேன்?

அவளுக்கேயுரிய திறமை பெருஞ்செல்வம். அவள் அமைதி மற்றோர் மனதிலும் பேரமைதியை ஏற்படுத்துகிறாள்… உண்மையில் இயற்கையோடு உற்றுநோக்கி அதனை, ஒப்புவித்த முதல் பெண் பிரியா.

பொறுமை தான் நான் அவளிடத்தில் வியந்த முதல் குணம், நடத்தையிலும் பழக்கத்திலும் தூய்மையாக இருந்தாள், அவள் படிப்பும் ஈடுபாடும் உயர்வை நோக்கியதாகவே இருந்தன, மற்றோருக்கு உதவுவதிலும் பங்குகொள்வதிலும் பரந்த மனதை நிறைவாகத் தன்னகத்திருந்தாள், தீய நோக்கத்தோடு நெருங்குவோரை நொடிப்பொழுதில் மாற்றியமைத்தாள்.

நிலம் - பொறுமை
நீர் – தூய்மை
ஆகாயம் - உயர்வான சிந்தனைகள்
காற்று – பரந்த மனம்
தீ – தீயவற்றை அழித்தல்

(பெண்கள் பஞ்சபூதங்களுக்கும் ஒப்பானவர்கள் என சொல்லப்படுவதன் ஆத்மார்த்தம் இதுதான். இப்போதுள்ள எத்தனை பெண்களுக்கு இவற்றின் அர்த்தம் தெரியும்?)

அவள் அனைத்திலும் நிறைவானவள். ஏதோ ஓர் உறவுநிலையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை அவதானித்து அல்லது அவளோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பதை நான் அப்போதே முடிவுசெய்தேன்.
அவள் திரும்பிப்பார்ப்பாள் என செய்த குறும்புகள் ஏமாற்றத்தை தந்தன.

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்.

கறுப்பு வேலி
நிலையாமை நிலையானது என்பார்கள்। உண்மை தான்। இத்தனை நாளும் மனதோடு மணமாக இருந்தவள் எங்கோ மாயமாகியிருந்தாள்.

அடைமழையிலும் கதிர் வருமென காத்திருந்த மொட்டின் மீது இடிவிழுந்ததாய் மனம் சிதறிப்போனது.

இனிமேல் சந்திக்க முடியாது என்பதையும் கேட்டு அறிந்தபோது எனது வலிகளின் தாக்கத்தை வரிகளில் கூறிவிட முடியாது.

ஆகாய உயரத்துக்கு இருந்த பெருமலையொன்று அக்கினிச் சுவாலையாய் எரிந்து என்னை அணைத்துக்கொண்டது போல…

காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. எனக்கும் அவளுக்குமிடையிலான இடைவெளி பெருகாமலும் குறையாமலும் எனக்குள். ஆனால் அவள்???

எங்கோ சென்றிருந்த அவளை எப்படியோ கண்டுபிடித்த போது பாலைவனத்துக் கள்ளிச்செடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்வது போலிருந்தது எனக்கு.

அவள்... என்னை விட்டு வெகுதூரம் போயிருந்தாள். நினைக்கமுடியாதளவுக்குப் போயிருந்தாள்.
அவளுக்குள் ஏராளமான திறமைகள் கொட்டிக்கிடந்ததாய் ஏற்கனவே கூறியிருந்தேன். அவற்றை சரியாகப் பிரயோகித்திருந்தாள் போலும்.

காலம் சரியான மருந்து என்பார்கள். அந்தக் காலம்தான் அப்போது அவளுக்குள் காதலையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால்….

அது என்னோடல்ல….

என் காதலைச் சொல்லாதது எத்தனை தவறு? எனக்குள் பிரசவித்து முளைத்து பூத்துக் குலுங்கி,பூப்பெய்தி மணம் பரப்பிய காதலை எந்தத் தொட்டிலில் கொட்டுவது?
உயிரின் ஆழம்வரை ஆணிவேராய் ஆக்கிரமித்து உணர்வுகளுக்குள் வேர்பரப்பியிருந்த காதலை எந்தக் கத்தி கொண்டு அறுப்பது?

“முடியாது” என முரண்பிடிக்கும் மனதின் கொடூர வெப்பத்தை தாங்க முடியாத காதல்கனங்கள் கண்ணீராய் உருமாறி காணாமல் போயின.

அப்போது நிகழ்ந்தது எதிர்பாராத அவளுடைய சந்திப்பு. பத்து வருடங்களுக்குப் பிறகு….

(தொடர்ந்தும் பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

ஓர் உண்மை வாசகம்


கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்

மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…

பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…

உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….

இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது

மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்

கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்

கோடி பூக்களோடு
நீ – என் வானில்

பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு

‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா (02)

"சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது. சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்"

------------------------------------------------------------


1996.

நான் இயற்கையை முழுமையாக ரசிக்கத் தொடங்கிய காலம் । இயற்கைக்கும் மனிதனுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை தனிமையில் பலதடவைகள் சிந்தித்திருக்கிறேன்.

நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பதை தோண்டித் தோண்டிப் பார்த்த ஆவல்மிக்க அந்திநேரங்களை மறக்க முடியாது.

அதிகாலைச் சூரியன், சில்லென்ற காற்று, காட்டுச் சேவலின்கூவல், வீட்டுக்கு நேரேயிருந்த மலைமுகடு, அங்கு ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட காட்டு மரங்கள், புறாக்கூடு, உச்சியிலிருந்து பார்த்தால் தெரியும் அம்மன்கோயில், புல்வெளியற்ற மைதானம், தென்னைமரத்தடி, நிலாச்சாரல் என இன்னும் எத்தனையோ ஆலாபனைகள் என்னை இயற்கையின் மடியோடு கண்ணிமைக்கச் செய்திருந்தன.

மனிதனுக்கு பெருஞ்செல்வத்தையும் பேரமைதியையும் தருவதில் இயற்கை தவிர்ந்த பெருங்கொடை வேறெதுவும் இல்லை.

காலம் தள்ளிப்போய் முதல் பருவங்களை கடந்தபோதுதான் அறிந்தேன். இந்த இயற்கைக்கும் “பெண்” என்ற படைப்புக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்பதை.

அதுவும் பள்ளிப்பருவத்தில்…

பெண்ணுக்குள் பெருஞ் செல்வம் அடங்கியிருக்கிறது. அதைக்கொண்டு அவளால் பேரமைதியைத் தரமுடியும்.

1997.

“பிரியா”
பள்ளியில் அவளுக்குத்தான் முதலிடம். அவளருகில் நிற்பதற்குக் கூட போட்டிபோட்ட நாட்கள்…. திறமையும் ஆளுமையும் கடவுள்கொடுத்த கொடை.
அதற்கும் மேலாக…. அவள் அழகு!

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।

பிரியாவின் அசைவுகளும் ரசனைமிக்கன. வெறுமையுற்ற பொழுதுகளில் அவளை கவிதையாகக் கீறி மனதில் செதுக்கிக்கொண்டேன்.

சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது। சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அசைவுகளால் வசியச்செய்யும் அவள், அவளுக்கே தெரியாமல் என்னுள் சிற்பமாகிக்கொண்டிருந்தாள்.

"வானம் அந்திப்படும்பொழுதிலும்
உன் வருகை எனக்கு விடியலைத் தருகிறது

எதேச்சையாகக்கூட பார்க்கமாட்டாயா?
காதல் விமோசனத்துக்காக எத்தனை நாள் காத்திருப்பது?

இந்த விடலை நினைவுகள் விதையாக்கப்படுமானால்
வளர்ந்த பின் விருட்சத்தை எப்படி வீழ்த்துவாய்?

காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"

இவை,அவள் நினைவுகளால் என்குள் பிரவித்தவை.

அவள்மீது காதல் கொள்ளவில்லை. மாறாக ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்குள் இருப்பதாயும்
அது அன்பின் நிலைகள் எல்லாவற்றையும் தாண்டியதாயும் உணர்ந்தேன்.

அமைதியில் அமைதி இருக்கிறதென்பார்கள். தியானத்துக்காக கடவுள் சிலைகளை பார்த்திருப்பதன் யதார்த்தம் இதுதான். அமைதியிலிருந்துதான் அமைதி கிடைக்கிறது என ஓஷோ சொல்லியிருக்கிறார்.
"இல்லாததிலிருந்து உள்ளது தோன்றாது. உள்ளதிலிருந்து தான் உள்ளது தோன்றும்" என்கிறது சித்தாந்தம். அவள் அமைதியிலிருந்து எனக்கும் அமைதி பிறந்தது.

அவள் அதிகமாகப் பார்த்த இடம் அவளுடைய பெருவிரலாகத் தான் இருக்க முடியும்.

மனதின் மையப்புள்ளிகளை அறியமுடியவதில்லை. ஆழமான சோகத்திலும் அளவுக்கதிகமான சந்தோஷத்திலும் நிறைவாக மனம் களித்திருக்கும் வேளையில் எந்தச் செயல்கள் செய்தாலும் அந்த சோகமோ சந்தோஷமோ மனதின் ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து நம்மை வளப்படுத்துவதாய் உணர்ந்திருப்போம். அது அதிகமாய் உணரப்படுவதற்கு சிரமமானது.

அவளைப் பார்த்த பல பொழுதுகளில் அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நான் வாழ்ந்த காலங்கள்.
(தொடர்ந்து பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

“நிவேதப்ரியா” (01)


பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை. சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட, பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான் -

நிவேதன் எழுதத் தொடங்கிய வரிகள் இவை...

நிவேதன் - கொஞ்சம் அறிவோடு பேசுவதற்காகவே படைக்கப்பட்டவன் என பலர் சொல்வதுண்டு. நிவேதம் என்பதற்கு படைத்தல்,கொடுத்தல் என தமிழில் பொருளுண்டு. இது ஓர் உன்னதமான சொல்.
மனிதனுக்கு படைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் உணவு, சாப்பாடு என்கிறோம். அதனையே கடவுளுக்கு செய்தால் அதனை நிவேதனம் என்கிறோம்.
நிவேதனும் அவ்வாறுதான். படித்தது கொஞ்சமாயினும் கொடுத்தது அதிகம். அதாவது உழைப்பாளி. அப்படியென்றால் பிறருடைய சந்தோசத்துக்காக எதையும் செய்யக்கூடிய உழைப்பாளி.

நிவேதனுக்கு வயது 25. எழுத்தாளன்.

சோகங்களை, யாரிடமும் சொல்லமுடியாத வேதனைகளை எழுத்தில் வடித்து கிழித்துவிடுவது அவனுடைய வழக்கம். அப்படி அவன் எழுதிக் கிழித்தது ஏராளம்.

பண்டைய கிரேக்கர்கள் இவ்வாறானதொரு முறையை கையாண்டதாக கூறுவதுண்டு. அதாவது தமது பிரச்சினைகளை எழுதிக் கிழித்து ஆற்றிலோ அல்லது இனி தேடினாலும் அந்தக் கிழிஞ்சல்களை அண்டமுடியாத இடத்தில் போட்டுவிடுவர். அப்போது அந்த வேதனைகள் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போதும் பல சமயத்தவர்கள் நேர்த்திக் கடன் என செய்வதில் உள்ள உள்ளாந்த அர்த்தமும் இதுதான் எனத் தெரிகிறது.

பிரியா - இவள் மனைவியாகிவிடமாட்டாளா என ஏங்கிய கூட்டம் ஏராளம். மானிறம், கருவிழிகள், ஒருபுறம் குழிவிழும் மெத்தென்ற கன்னம், பலமடங்கு பள்ளத்தில் விழுந்தாலும் நேர்த்தி மாறாத காட்டாற்றுக்கூந்தல், மெல்லிடை, மேகமேனி என அவள் ஒரு காவியமாகத் திகழ்ந்தாள்.
உதயகாலப் பொழுதொன்றில் வெண்தேவதைகள் இணைந்து செதுக்கிய சிற்பம்போலானவளுக்கு அறிவும் திறமையும் ஆழமாய் நிறைந்திருந்தன. சிந்தனை, பேச்சு, நடத்தை அனைத்திலும் அவள் பாங்கும் பாணியும் தனியானவை. (நிவேதனின் எழுத்துகளில் பிரியா வரையப்பட்டிருக்கிறாள் என்பதற்காக இங்கு அதிகம் தரப்படவில்லை)

ஆண், பெண் என்றாலே அநேகர் பார்வையில் முதலில் தெரிவது “காதல்” என்பதுதான். இவர்கள் இருவரும் எப்படித் தொடர்புபடுகிறார்கள்? எவ்வாறு வாழ்வோட்டத்தில் கலக்கிறார்கள்? இதற்கும் சோக சம்பவங்களை கிழித்துவிடுவதற்கும் என்ன தொடர்பு? – நிவேதனின் வரிகள் தொடர்கின்றன…

பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை। சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான்.

சுகம் தான் வேதனைகளாக பரிணாமம் கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை எந்தச் சோகத்தையும் இவ்வளவு நேர்த்தியாக எழுதி நான் கிழித்ததில்லை. ஆனால் இதனை நிறைமனதோடு எழுதுகிறேன். ஏனென்றால் காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு பற்றி மனதுக்குள் ஊன்றிப்போனதை என் எழுத்துக்களால் மீட்டெடுக்கிறேன். மறக்க முடியாத பாழ்ய நினைவுகளுக்குள் மங்காத நினைவுகளாய் இன்னும் தொடரும் பலவற்றை கோர்த்துவிடுகிறேன். இங்குவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பிரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆனால்…. இதுவும் கிழிக்கப்படவேண்டியது.

(தொடர்ந்தும் பேசுவான்)

விரிவாக படிக்க ……..