அடைமழை – வெறும்வீதி – நீ – நான்

மென்காற்றோடான வாசம்
இந்த வழியில்தான்
சென்றிருக்கிறாய்
வழியிடையெங்கும்
உன் விழிபார்த்த இடமெல்லாம்
விழியொளியில் மெய்மறந்து
சலனமில்லாமல்
அடங்கிப்போயிருக்கின்றன
கால்பதித்த சுவடுகளில்
இனிப்புச்சுவை தேடி
எறும்பூறி மார்பதைக்கின்றன
மணல்வெளியில் சிதறிய
உன் ஒற்றைப்பூவைச் சுற்றித்தான்
எத்தனை வண்ணத்துப்பூச்சுகள்
சலங்கை ஒலிக்குள்
சவீகரித்துப்போனதாய்
சத்தமில்லாமல் விழுகிறது
மழைத்துளி
என் கன்னங்கள் மட்டுமல்ல
அந்தப் பெருநிலமே
நனைகிறது
இதயத்துக்கு உரம் தந்தவளால்
முழு உடலும் ஈரமாகிறது
அடைமழையில்
கண்ணீருக்கான அடையாளங்கள்
காணாமல்போகின்றன
இந்தமழையும்
உன் சிரிப்பும் ஒன்றுதான்
கரைந்துபோகும் உன் சுவடுகளை
கடன் கேட்டா இனிப்பெறமுடியும்?
எனக்கான உன் தற்காலிக
அன்பைப் போலத்தான் இவையும்
உன் முன்னால் நின்று
பேசியதைவிட
உன்னோடு பேசியவை அதிகம்
ஏன்
இந்த பாழ்வீதியில்நின்றுகூட
உன்னோடு நடக்கும்
மௌன ஏகுதல்களுக்கு
ஆதாரம் ஏது?
இந்த வீதி
மழை
மணம்
சுவடுகள்
எல்லாவற்றையும் விட்டுச்செல்கிறேன்…
நீ சென்ற வழிக்கு நேரெதிராக!
நான் நீ இணைந்ததானதைத் தவிர்த்து
எனக்கானவளில்லாத உன்
எதையுமே நான்
எடுத்துச்செல்வதில்லை
மரணம் துரத்தினாலும் - உன்
மடியில் இறக்கும் வேண்டுதல்
இனி என்
பட்டியலில் இல்லை!
- ஆர்.நிர்ஷன்
இறக்குவானை.
