ஓர் உண்மை வாசகம்

கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்
மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…
பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…
உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….
இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது
மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்
கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்
கோடி பூக்களோடு
நீ – என் வானில்
பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு
‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’
-இராமானுஜம் நிர்ஷன்
