Todays Date:
Showing posts with label ஊடகதர்மம். Show all posts
Showing posts with label ஊடகதர்மம். Show all posts

உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு

அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.

அடுத்ததாக அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி யார் கொலை செய்தார்கள்?

அப்போது தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கு திருகோணமலை செய்தியாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் துணிவாக செய்திகளை அவர் தந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவரிடம் தொடர்புகொண்டு நடந்தவற்றை விபரிக்குமாறு கேட்டோம்.

“திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் இந்த மாணவர் குழாம் மாலை வேளையில் கூடிக் களித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர் அவர்கள் மீது கைக்குண்டை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பிறகு அங்கு வந்த கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்” என்றார் சுகிர்தராஜன்.

உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைத்ததுடன் நடந்தவற்றை தெளிவாக எழுதியிருந்தார்.

உண்மைகள் வெளிவந்ததால் இந்தச் சம்பவம் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹர்த்தால், சோக தினம் என அடுத்தடுத்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் அதே மாதம் 24 ஆம் திகதி எமக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. “சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்”.

நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திறமையான ஊடகவியலாளர்கள் பலரை தமிழ்ச் சமூகம் இழந்திருக்கிறது. அதனால் சமூகம் அடையவிருந்த எழுச்சியில் தொய்வு ஏற்பட்டது என்று சொல்வதில் தவறில்லை.

இலங்கை மண் இழந்த ஊடகவியலாளர்களில் சுகிர்தராஜன் என்ற திறமைசாலியை ஊடகச் சமூகம் எளிதில் மறந்துவிடாது.


பெயருக்காகவும் புகழுக்காகவும் ஊடகத்தொழில் செய்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் தான்சார்ந்த சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும், இன்னல்படும் உறவுகளுக்குக் கைகொடுத்து உண்மையை உள்ளவாறே உரைக்க வேண்டும் எனக் கொள்கையோடு வாழ்பவர்கள் இன்றும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவ்வாறு தீர்க்கமான கொள்கையுடைய சுகிர்தராஜனின் இழப்பால் திருகோணமலை மண்ணின் பல்வேறு உண்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் மறைத்திருக்கின்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் அவரது படுகொலையின் பின்னர் ஏனைய ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவரத் தயங்கினார்கள். சுகிர்தராஜனைப் போல இளவயதில் மரணத்தை எதிர்நோக்க பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

வார்த்தையை வார்த்தையால் எதிர்நோக்க வேண்டும். பலவீனத்தை பலத்தால் எதிர்நோக்குதல் தவறு என அவரது கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிட்டதுண்டு.

சுகிர்தராஜனைப்போன்ற ஊடகவியலாளர்கள் அரிதாகவே சமூகத்தில் இனங்காணப்படுகிறார்கள்.

சுகிர்தராஜனின் வெளிப்படையானதும் நியாயமானதுமான எழுத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத விஷமிகளால், பேனா முனையால் எதிர்கொள்ள முடியாத தீய சக்திகளால் அவர் ஆயுதமுனையில் கொல்லப்பட்டார்.

தனது 37 ஆவது வயதில் குடும்பம், பிள்ளைகள் பரிதவிக்க உயிர்நீத்தமையும், உறவினர்கள் கதறியழுதமையும் கொலைகாரர்களை எந்தவிதத்திலும் பாதித்திராது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

அந்தச் சோகம் மறைந்துபோகட்டும் ஜனநாய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் கொலையுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தத்தானே போகிறது என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில் 18 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேரின் கொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்?

சம்பந்தப்பட்டவர்கள் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்ல முன்வருவதில்லை. விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறியே காலம்கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதேநேரம், உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்படவில்லை.

காலம் பதில்சொல்லும் என ஆறுதல்கொண்டு கசப்பான உண்மைகளை மறந்துவிடவும் முடியாமல் சுகிர்தராஜன் பற்றிச் சிந்திக்கையில் எதிர்காலத்தின் மீதான ஏக்கப்பார்வையில் ஜனநாயகம் நிறம்மாறித்தான் தெரிகிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

சில அரசியல்வாதிகளுக்குத் தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அளவுக்கு அதிகமாகவே உண்டு. இதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் - செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

உண்மையைப் பொய்யாக்குவார்கள்; பொய்யை உண்மையாக்குவார்கள்.... இப்படி எத்தனை எத்தனையோ சித்து வேலைகள்...!

இவர்களிடையே தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அடிக்கடி மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு.

அவ்வாறானவர்களில் இப்படியும் வித்தியாசமான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சரி. விடயத்துக்கு வருவோம்.

'லங்காதீப' பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் மேல்மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

தன்னைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அரசியல்வாதியின் அபிப்ராயம். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். பெரிதாக எந்தக் காயமும் இல்லாமல் தப்பிவிட்டார்.

அந்தச் சம்பவத்தை நேரில்வந்து படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையே என்ற கோபத்தில் தான் அந்த ஊடகவியலாளரை அவர் தாக்கியுள்ளார்.

இப்படியும் சில சுயநலவாத விஷமிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்பது பிரதேசவாசிகளின் ஆதங்கம்.

"நான் எப்படியோ தப்பித்து விட்டேன். இவரிடம் சிக்கித் தவிக்கப்போகும் பிரதேச மக்களின் எதிர்காலம் பற்றித் தான் எனக்கு யோசனையாக இருக்கிறது" என்கிறார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

-----------------------------------------------------------------

ஜனாதிபதித் தேர்தலும் ஐந்து கிலோ அரிசியும்....!

ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்பை அண்டிய சில பகுதிகளில் அரிசி கொடுத்து வாக்குக் கேட்கும் நபர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஊறுகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சிலர் வீடு வீடாகச் சென்று ஐந்து கிலோ அரிசி கொடுத்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கடந்த 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் 21 ஆம் திகதிமுதல் இப்படியொரு மறைமுகப் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.

பிரதான வேட்பாளர் ஒருவரின் சின்னத்தைக் கூறி அந்தச் சின்னம்தான் உங்களுக்கு அரிசி தருகிறது என்கிறார்களாம் அந்த நபர்கள்.

இரண்டு நாட்களாக அப்பகுதியிலுள்ளவர்களுக்கு இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்கஇ அரிசி கொடுக்கும் செய்தி மேலும் பல பகுதிகளுக்குப் பரவியதால் குடும்பப் பெண்கள் பலர் தொழிலுக்குச் செல்லாமல் காத்திருந்ததாகவும் தகவல் கிடைத்தது.

முடிவு அறிவிக்கப்பட்டதும் கொடுத்த அரிசியை திரும்பவும் வாங்கிக்கொள்ள அவர்கள் வந்தாலும் வரலாம் என்றது மற்றுமொரு வட்டாரம்.

'அரிசி' க்கு பலன் கிடைக்காமலில்லை.

எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தால் கொடுத்த அரிசியை பெற்றுக்கொள்ளப்போவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒருசிலர் மிரட்டிவருவதாக கூறப்படுகிறது.

அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா!

-----------------------------------------------------------------

மகா சிவராத்திரியும் மகா சல்லாபமும்!

மகா சிவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. வழமைபோல ஆலயங்களில் இரவிரவாக சல்லாபம் செய்வதற்கு இளைஞர்கள் பலர் தயாராகி வருகிறார்கள்.

"மச்சான்... சிவராத்திரி வருதாமே" என்றார் நண்பரொருவர்.

"வரவில்லை. அது நிர்ணயிக்கப்பட்டதுதான். ஏன் என்ன விஷயத்துக்காக" என்றேன் நான்.

"திகதியில ஏதோ பிரச்சினை இருக்குபோல"

"மார்ச் 13 தான் சரியான நாள். என்ன செய்யனும்"

"இல்ல டா. ரெண்டு துண்டுகள (நம்ம நாட்டுல தாய்க்குலத்துக்கு சொல்லுற வார்த்தை) செட் பண்ணியிருக்கேன். ஒன்ன கப்பித்தாவத்த கோயிலுக்கு அனுப்பப் போறேன். மற்றத பொன்னம்பலவாணேஸ்வரத்துக்கு அனுப்பப் போறேன். சரிய டைம் செட் பண்ணிக்கனும். அதான் கேட்டேன்"

இப்படியொரு கூட்டம் இன்னும் அலையுது. புனிதமான நாளில் புனிதத்தைக் கெடுக்க எத்தனை ஆசாமிகள் இப்படிக் கிளம்பியிருக்காங்களோ?

-----------------------------------------------------------------

ஊடக தர்மம்?

இலங்கையிலுள்ள பிரபலமான ஊடக நிறுவனம் அது. அடிக்கடி ஊடக தர்மம் பற்றியும் சமநிலைவாதம் பற்றியும் சமுதாய அங்கீகாரம், நடுவுநிலைமை பற்றியும் எடுத்துரைத்து சமுதாயத்தை விழிப்புணர்வூட்டிக்கொண்டிருக்கும் நிறுவனம்.

அங்கு ஒரு பிரிவிலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றைய பிரிவுக்கு செல்ல முடியாது. ஒரே நிறுவனம் தான். ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லை போல.

விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார் நபர் ஒருவர். அங்கு நண்பர்களால் மற்றொருவர் அறிமுகப்படுத்தப்பட்டதும்," நான் இந்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன் எனச் சொன்னாராம். அதற்குப் பதிலளித்த மற்றைய நபர் அடடா... நானும் அங்கே தான் என்றாராம்.

ஒரே வீட்டில் பிரிவினைவாதத்துடன் எத்தனை குடும்பங்கள். மற்றைய பிரிவுகளைச் சேர்ந்தோர் எதிரிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர்.

தன்னுடைய பிரிவின் தலைவர் விரும்பாத ஒரு நபருடன் அந்தப் பிரிவிலுள்ள எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம். அப்படியானால் வேலைக்கு ஆப்பு தான்!

நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு இது நல்ல சந்தர்ப்பம் தானே? அதனால் வாய்மூடி கூத்துகளை பார்த்துக்கொண்டிருக்கிறது. பாவம் இந்த ஊழியர்கள்.

இதுதான் சமநிலை வாதமோ?

விரிவாக படிக்க ……..