Todays Date:

#VOPL2013: அனைவருக்கும் நன்றி

இலங்கையில் தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி எமது கிரிக்கெட் போட்டியின் வாயிலாக சாத்தியமாகியது. உண்மையில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் கடந்த சனிக்கிழமையும் உள்வாங்கப்பட்டுக்கொண்டது.

பதிவர்கள் என்றால் கண்டதையும் கேட்டதையும் எழுதித் தீர்க்கும் வேலையற்றவர்கள் என ஆரம்ப காலங்களில் பலராலும் நாம் பார்க்கப்பட்டு வந்தோம். காலம் செல்லச் செல்ல இணைய வெளியில் பதிவர்களின் வருகையும் அவர்களால் முன்வைக்கப்பட்ட காத்திரமான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகவியலின் தாக்கம், அசாத்திய வளர்ச்சி காரணமாக இணைய எழுத்துலகின் தவிர்க்க முடியாத பங்காளர்களாக மாற்றமடைந்தார்கள்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு, சந்திப்புகள், போட்டிகள் என அடிக்கடி நடத்தப்பட்டாலும் கூட இலங்கையில் ஏனோ அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தான் அன்புக்குரிய சகோதரர் புருஜோத்தமன் டுவிட்டரில் வீரகேசரியோடு கிரிக்கெட் விளையாடலாமே என அன்பான அழைப்பினை விடுத்திருந்தார். அதனை சகோதரர் மயூரன் பெரியும் ஆமோதித்திருந்தார்.
சரி முயற்சித்துப்பார்க்கலாம் என அப்போது பதிலளித்திருந்தேன்.

அதற்குப் பின்னர் எமது செய்திக்குழுவோடு சிறு கலந்துரையாடலுக்குப் பின்னர் முகாமைத்துவத்துடன் பேசிய போது உடனே அனுமதி கிடைத்தது. முழுச் செலவையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்ற இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் அடுத்த கட்ட நகர்விற்கு தயாரானோம்.

கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு கோரினோம். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் எமது விதிமுறைகளுக்கு அமைவாக பதிவர்களை இணைத்துக்கொண்டோம்.

ஒரு சில பதிவர்கள் எம்மோடு முரண்பட்டுக்கொண்டார்கள். நாம் யாழ்ப்பாணத்தில் போட்டி வைக்கவில்லை என்றும் பிரதேசவாதம் பார்ப்பதாகவும் சமூக இணையங்களில் எழுதினார்கள்.

நான் அவற்றுக்கு தனிப்பட்ட ரீதியில் பதில் அளித்திருந்தேன்.

அதன்பிறகு மூன்று அணிகளுக்கும் பெயர்களை வைத்தோம். அதன்போது சிலர் பெயர்கள் பொருத்தமற்றவை என எழுதினார்கள்.

இலங்கையில் பேஸ்புக்,டுவிட்டர்,யுடியுப் ஆகிய தளங்களையே அதிகமானோர் உபயோகிப்பதால் நாம் அதற்கேற்றவாறு பெயர் வைத்தோம் என்று சொல்லியும் அதை அவர்கள் கேட்கவில்லை.

அதில் கவலையான விடயம் என்னவென்றால் என்னோடு நெருங்கிப் பழகுபவர்களும் எமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைதான்.
தொடர்ச்சியாக நாம் எமது உள்ளக சந்திப்புகளை மேற்கொண்டோம். காத்திரமான திட்டமொன்றை தீட்டினோம்.

போட்டிக்கான ஏற்பாடு, விண்ணப்பதாரர்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பினை ஏற்படுத்தல் போன்ற பிரதான பொறுப்புகளை தம்பி கவிந்தன் நேர்த்தியாக முடித்துக்கொண்டிருந்தார்.

மறுபுறம் வெளிவேலைகள், திட்டமிடல்கள் அனைத்தும் தினேஷ் பொறுப்பாக நின்று கவனித்துக்கொண்டார். உள்ளக விடயங்கள், செய்தியாக்கம், விளம்பரம் ஆகிய விடயங்களை தம்பிமார்களான லூசியும் சின்ன பிரசன்னாவும், தர்ஷனும் கவனித்துக்கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய பொறுப்பில் கவனமாக இருந்ததால் எனக்கு வேலை இருக்கவில்லை.

போட்டிக்கான திகதியை நிர்ணயித்து நாள் நெருங்க நெருங்க எமக்குள் பயமும் தொற்றிக்கொண்டது.

போட்டிக்கு முதல்நாள் மழை...தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது. எமக்கு பதிவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமே இருந்தன. எனினும் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என நாம் தீர்மானித்திருந்தோம்.
எமது ஏற்பாட்டுக்குழுவுடன் சின்ன கலந்துரையாடலுக்கு அழைத்து அவரவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைத்தோம்.

அடுத்தநாள் விடியல்.. காலை 4 மணி. மழை வருமோ என்ற அச்சத்தில் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டிருந்த எனக்கு அதிகாலையிலேயே விழுந்தது இடி.

ஆம்..அவிசாவளையில் அடை மழை. இறைவனை நொந்துகொண்டு பிரசன்னாவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

தம்பி கொழும்பில் மழையா?
இலேசான தூரல் அண்ணா.. என்ன செய்வோம்?
பார்க்கலாம் என்று அழைப்பினை துண்டித்தேன்.

அடுத்ததாக நாம் போட்டி நடத்தும் மலே மைதானத்துக்கு அருகில் வசிக்கும் தினேஷ{க்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

மூன்று மணியளவில் மழை பெய்தது. இப்போது மழை இல்லை. நீங்கள் தைரியமாக வாருங்கள். கடவுள் எம் பக்கம்தான் என்றார்.

கொட்டும் மழையிலும் காலை 4.40 மணிக்கு பஸ் எடுத்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். விடியவில்லை, இலேசான தூரல் இருந்தது.

லூசியஸ், தர்ஷன், பிரசன்னா, சுகிர்தனுடன் மைதானத்துக்கு சென்று வேலைகளை கவனித்தோம்.

போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த கவிந்தன் அலுவலகத்தில் இருந்து செய்தி தரவேற்றங்களை கவனித்துக்கொண்டார்.

மழை வரும் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தபோதிலும் பின்னர் மாற்றமடைந்தது.

அதிக வெயிலும் இல்லை, மழையும் இல்லை. போட்டி திட்டமிட்டபடி நேர்த்தியாக நடைபெற்ற முடிந்தது.

வீரகேசரி இணையத்தளத்தின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பானவன் என்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களான ருசெய்க், வினோத், விநோதன், சுபா, ஷாரா, கமல், கஜன், ரிசாத், சுகிதரன், சுவேன், பிரஷாந்தன் ஆகியோர் திறம்பட தத்தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார்கள்.

இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்போடும் நாம் வெற்றிகண்டோம்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள். ஒருசிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தராத போதிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

சிரமம் பாராது வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமக்குத் தெரியாமல் ஏதாவது குறைகள் இடம்பெற்றிருக்கலாம் எனினும் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாவண்ணம் சிறப்பாக செயற்படுவோம் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் ஏற்பாடு செய்த பதிவர் ஒன்றுகூடலில் பெண் வலைப்பதிவாளர்களை இணைத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் அவர்களுக்காகவும் நாம் செயற்பட எண்ணியுள்ளோம். அத்தோடு அடுத்த வரும் இவ்வாறானதொரு போட்டியை வெளி மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் எண்ணம் கொண்டுள்ளேன்.

காலநிலை உட்பட அனைத்து விடயங்களுமே எமக்கு சாதகமாக அமைந்திருந்தது. இறைவனுக்கு நன்றி. ஏற்பாட்டுக்கு அனுமதியளித்து எம்மை வழிநடத்திய நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு நன்றி.
வெற்றிகரமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளும் வணக்கங்களும்.

-அன்புடன்
இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..