Todays Date:

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.

வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர்.


ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என்றெல்லாம் வாக்கு கேட்டவர்கள் பதவி மோகத்துக்காக பிரிந்து நிற்கின்றமை வாக்களித்த மக்களிடையே பெருங்கவலையை உண்டுபண்ணியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி இருந்தது. ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதிலும் உட்கட்சிகளிடையே முரண்பாடு காணப்பட்டது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது.

அதற்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள், கூட்டமைப்பினரா இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளமையும் ஒவ்வொரு கட்சியும் கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்காமல் தன்னிச்சையாக இயங்கும் நிலைமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமையை அங்கத்துவ கட்சிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தமையையும் சில கட்சிகள் விரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமான பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வை வட மாகாண சபைக்குத் தெரிவான 9 உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.

இவ்வாறு நடக்கும் என்று தமிழ் மக்கள் சற்றேனும் நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வே இடம்பெற்றது.

அமைச்சு தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தாம் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் பதவியேற்பு நிகழ்வை நிரகரித்திருந்த உறுப்பினர்கள், 14 ஆம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளின் பிரகாரம், கூட்டமைப்பின் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கமைய பதவிப்பிரமாண நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.

எனினும் அவரது வேண்டுகோளையும் மீறி அதேநாள் காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோன்று புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் யாழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டு மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக பிரிவின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுவதை தமிழ் மக்கள் கவலையுடன் நோக்குகிறார்கள்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன.

அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது.

கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை குறுகிய காலத்தில் பேசித் தீர்மானிக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.


கூட்டமைப்பினர் கட்சி ரீதியாக பிளவுபடும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் மக்களையே பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து கூச்சலிடும் இனவாத விஷமிகளுக்கும் இந்த விடயம் சாதகமாகிவிடும்.

அதுமட்டுமல்ல கூட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை விரும்பாத சக்திகள் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி அக்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்ய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இடமுண்டு.

தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கு தமிழ்த் தலைமைகளிடையே நீண்டகாலமாக காணப்படும் ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும் அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடமை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் இன்னுமொரு வரலாற்றுத் தவறு இடம்பெற்று எதிர்காலத்தில் ஏக்கங்கள் மாத்திரமே மிஞ்சும் நிலை உருவாகக் கூடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய தமிழ்த் தலைமைகளின் பெயர் கறை படிந்த கறுப்புப் புள்ளியாய் மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

'நடா' என்றொரு ஆளுமை



அது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி. வீரகேசரியின் பிரதம ஆசிரியருக்கு நேரடியாக கடிதம் ஒன்றை வரைந்திருந்தேன்.

பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எனது இலட்சியம், சிறு பராயம் முதல் எழுத்துத் துறையில் உள்ள ஆர்வம் என்பவற்றைக் குறிப்பிட்டு நான் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றையும் இணைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்தது. பெண் ஒருவரின் குரல். வீரகேசரியிலிருந்து பேசுவதாகவும் ஆசிரியர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் அந்தக் குரல் கூறியது.

அதன் பிரகாரம் வீரகேசரியின் வாயிலில் சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து ஆசிரிய பீடத்துக்கு வந்தேன்.

மெலிந்த கறுத்த உடல்வாகுடன் அமர்ந்திருந்தார் ஆசிரியர். அவர்தான் நடா சேர் என்பது எனக்குத் தெரியாது.

அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் மேசையின் மீதிருந்தது. ஏதோ கிறுக்கல்களுடன் இருந்த தாள்களை உற்றுப்பார்த்தவண்ணம் இருந்தார்.
நான் வந்ததும் அமரச் சொல்லிவிட்டு அவருடைய வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் எழுதத் தொடங்கும்போதுதான் தெரிந்தது அந்தக் கிறுக்கல்கள்தான் அவருடைய கையெழுத்து என்று..

மேசையின் ஓரத்தில் இருந்த சுருட்டை எடுத்து மேசையின் கீழே வைத்துவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.

"தம்பி, உங்களுடைய கட்டுரைகளை வாசித்தேன். நாலு கட்டுரைகளை எழுதிவிட்டு பத்திரிகையாளனாக வர வேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் இதை தொழிலாக இங்கே செய்துகொண்டிருக்கிறோம்"

வார்த்தைகளில் கடும் தொனி தெரிந்தது.

நான் அமைதியாகவே இருந்தேன். மீண்டும் பேசத் தொடங்கினார்.
எந்த பாடசாலை, கல்வித் தகைமைகள் எல்லாவற்றையும் கேட்டார். அருகில் இருந்த சிங்கள பத்திரிகையொன்றை கொடுத்து வாசிக்கச் சொன்னார். வாசித்தேன்.

"இங்கே 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் கொடுப்பார்கள். ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருந்து வேறு செலவுகளையும் பார்ப்பதற்கு இந்த வருமானம் போதாது. ஆத்ம திருப்திக்காக வந்து வேலை செய்தாலும் சாப்பிடுவதற்கு பணம் இல்லையென்றால் என்ன செய்வது?

ம்ம்... என்ன சொல்கிறீர்கள் தம்பி?

என்ன 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளமா? இது எந்த வகையில் எனக்குப் போதும்? என மனதில் நினைத்துக்கொண்டேன்.

'உங்களுடைய அப்பா பிரதம குமாஸ்தாவாக தொழில் புரிவதாக கூறினீர்கள் தானே? அந்த வேலையை நீங்கள் செய்யலாமே?

நானும் இப்படித்தான் ஆர்வம் காரணமாக வேலை செய்கிறேனே தவிர இங்கே பணம் சம்பாதிக்க முடியாது.

சரி - இன்னும் 6 மாதங்களின் பின்னர் வாருங்கள். நீங்கள் ரொம்ப சிறு பையனைப் போல தெரிகிறீர்கள். ஆதலால் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வோம்.

அதன்பின்னரும் இதே மன நிலையில் இருந்தால் நிச்சயமாக இங்கே இணைந்துகொள்ளலாம்.

தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய சிங்கராஜ வனம் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எழுத்து நடையில் நிறைய மாற்றம் வேண்டும். எப்போதுமே சுருக்கமாக, எல்லோருக்கும் விளங்கும் வகையில் எழுதுங்கள். தமிழில் எழுதுவதை கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். தேவையான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தும் கலையை வளர்த்துக்கொண்டாலே போதும்.

மிகுதியை பிறகு பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டு மேசைக்குக் கீழிருந்த சுருட்டை எடுத்தார்.
நான் எழுந்து செல்லத் தயாரான போது மீண்டும் அழைத்து என்னுடைய பெயரைக் கேட்டார்.

நான் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரிய பீடத்தில் இணைந்தேன். அப்போது வார வெளியீட்டின் ஆசிரியராக வி.தேவராஜ் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

பிறகு நடா சேரை நான் நீண்ட காலமாக சந்திக்கவில்லை. எனக்கு வேலைகள் பலவற்றை கற்றுக்கொடுத்த சிவலிங்கம் சிவகுமாரன் நடா சேரைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒருமுறை சுடரொளி பத்திரிகை நிறுவனத்துக்கு புத்திரசிகாமணி ஐயாவை சந்திக்கச் சென்ற போது அங்கே இருந்தார் நடா சேர்.

ஆம் அவர் சிறியதொரு அறையில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். சுடரொளியின் ஆசிரியபீட ஆலோசகராக அவர் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

மீண்டும் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

செய்தி என்றால் என்ன? எவ்வாறு செப்பனிடுவது? புதிதாக துறைக்குள் வருபவர்கள் விடும் தவறுகள் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை பேசினார்.
ஊடக துறையில் உள்ள வெட்டுக் குத்து, எப்படி சமாளிப்பது என்பவற்றையும் சிரித்துக்கொண்டே சொன்னார்.

தம்பி ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்.

பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தன்னுடைய செய்தியாளரை அரசியல் நிகழ்ச்சியொன்றுக்கு செய்தி சேகரிப்புக்காக அனுப்பினாராம்.

நிகழ்வில் யார் யார் வருவார்கள், யார்,யார் பேசுவதை நன்றாக அவதானித்து எழுதிக்கொள்ள வேண்டும், நிகழ்ச்சி தொடர்பாக எவ்வெந்த விடயங்களை கவனிக்க வேண்டும், நேரத்தை எப்படி குறித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்பினாராம்.

ஆர்வத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சில மணி நேரங்களுக்குள் பரபரப்பாக ஆசிரியரிடம் ஓடி வந்தாராம்.

சேர், நீங்கள் சொல்லிக்கொடுத்தது போல் என்னால் செய்தி சேகரிக்க முடியவில்லை என்றாராம்.

அதற்கு ஆசிரியர் ஏன் என்று வினவினாராம்.

சேர் நான் நிகழ்ச்சி பற்றிய செய்தி சேகரிக்கத்தான் சென்றேன். அங்கு குண்டு வெடித்துவிட்டது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று நீங்கள் சொல்லித்தரவில்லை. ஆதலால் பயத்தோடு ஓடிவந்துவிட்டேன் என்றாராம் செய்தியாளர்.

செய்தி சேகரிப்பதற்காக களத்துக்கு சென்றுவிட்டால் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். சிறு சிறு விடயங்கள் கூட நமக்கு உதவக் கூடும். இங்கே நான் கதையில் சொன்னது போல இருக்காதீர்கள் என்றார்.

அப்போது அவருடைய முகத்தில் சிறு புன்முறுவலும் இருந்தது.
ஆற்றலும் பண்பும் மிக்கவர்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பிறகு ஊடகவியல் கல்லூரியில் ஒருநாள் அவரை சந்தித்தேன். கதைக்கக் கிடைக்கவில்லை.

நடா சேர் போன்ற முன்னோரின் கடுமையான உழைப்பு, தூர நோக்கு, தமிழர் செல்நெறியை சிறப்பாக பேணியமை போன்றவை தான் இன்றும் நாம் ஊடகவியலாளர்களாக நின்று நிலைக்க காரணமாயிருக்கிறது.

நடா சேர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். உண்மையில் தமிழ் ஊடகத்துறைக்கு எப்போதுமே ஈடு செய்ய முடியாத இழப்பு இது.

நடா சேர் - உங்களோடு பழகிய பொழுதுகளை நான் பெருமையாக நினைக்கிறேன்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் பெயரும் சொல்லித்தந்த அறிவுரைகளும் எப்போதும் எம் மனதில் நிலைத்து நிற்கும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..