Todays Date:

'நடா' என்றொரு ஆளுமை



அது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி. வீரகேசரியின் பிரதம ஆசிரியருக்கு நேரடியாக கடிதம் ஒன்றை வரைந்திருந்தேன்.

பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எனது இலட்சியம், சிறு பராயம் முதல் எழுத்துத் துறையில் உள்ள ஆர்வம் என்பவற்றைக் குறிப்பிட்டு நான் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றையும் இணைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்தது. பெண் ஒருவரின் குரல். வீரகேசரியிலிருந்து பேசுவதாகவும் ஆசிரியர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் அந்தக் குரல் கூறியது.

அதன் பிரகாரம் வீரகேசரியின் வாயிலில் சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து ஆசிரிய பீடத்துக்கு வந்தேன்.

மெலிந்த கறுத்த உடல்வாகுடன் அமர்ந்திருந்தார் ஆசிரியர். அவர்தான் நடா சேர் என்பது எனக்குத் தெரியாது.

அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் மேசையின் மீதிருந்தது. ஏதோ கிறுக்கல்களுடன் இருந்த தாள்களை உற்றுப்பார்த்தவண்ணம் இருந்தார்.
நான் வந்ததும் அமரச் சொல்லிவிட்டு அவருடைய வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் எழுதத் தொடங்கும்போதுதான் தெரிந்தது அந்தக் கிறுக்கல்கள்தான் அவருடைய கையெழுத்து என்று..

மேசையின் ஓரத்தில் இருந்த சுருட்டை எடுத்து மேசையின் கீழே வைத்துவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.

"தம்பி, உங்களுடைய கட்டுரைகளை வாசித்தேன். நாலு கட்டுரைகளை எழுதிவிட்டு பத்திரிகையாளனாக வர வேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் இதை தொழிலாக இங்கே செய்துகொண்டிருக்கிறோம்"

வார்த்தைகளில் கடும் தொனி தெரிந்தது.

நான் அமைதியாகவே இருந்தேன். மீண்டும் பேசத் தொடங்கினார்.
எந்த பாடசாலை, கல்வித் தகைமைகள் எல்லாவற்றையும் கேட்டார். அருகில் இருந்த சிங்கள பத்திரிகையொன்றை கொடுத்து வாசிக்கச் சொன்னார். வாசித்தேன்.

"இங்கே 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் கொடுப்பார்கள். ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருந்து வேறு செலவுகளையும் பார்ப்பதற்கு இந்த வருமானம் போதாது. ஆத்ம திருப்திக்காக வந்து வேலை செய்தாலும் சாப்பிடுவதற்கு பணம் இல்லையென்றால் என்ன செய்வது?

ம்ம்... என்ன சொல்கிறீர்கள் தம்பி?

என்ன 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளமா? இது எந்த வகையில் எனக்குப் போதும்? என மனதில் நினைத்துக்கொண்டேன்.

'உங்களுடைய அப்பா பிரதம குமாஸ்தாவாக தொழில் புரிவதாக கூறினீர்கள் தானே? அந்த வேலையை நீங்கள் செய்யலாமே?

நானும் இப்படித்தான் ஆர்வம் காரணமாக வேலை செய்கிறேனே தவிர இங்கே பணம் சம்பாதிக்க முடியாது.

சரி - இன்னும் 6 மாதங்களின் பின்னர் வாருங்கள். நீங்கள் ரொம்ப சிறு பையனைப் போல தெரிகிறீர்கள். ஆதலால் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வோம்.

அதன்பின்னரும் இதே மன நிலையில் இருந்தால் நிச்சயமாக இங்கே இணைந்துகொள்ளலாம்.

தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய சிங்கராஜ வனம் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எழுத்து நடையில் நிறைய மாற்றம் வேண்டும். எப்போதுமே சுருக்கமாக, எல்லோருக்கும் விளங்கும் வகையில் எழுதுங்கள். தமிழில் எழுதுவதை கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். தேவையான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தும் கலையை வளர்த்துக்கொண்டாலே போதும்.

மிகுதியை பிறகு பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டு மேசைக்குக் கீழிருந்த சுருட்டை எடுத்தார்.
நான் எழுந்து செல்லத் தயாரான போது மீண்டும் அழைத்து என்னுடைய பெயரைக் கேட்டார்.

நான் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரிய பீடத்தில் இணைந்தேன். அப்போது வார வெளியீட்டின் ஆசிரியராக வி.தேவராஜ் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

பிறகு நடா சேரை நான் நீண்ட காலமாக சந்திக்கவில்லை. எனக்கு வேலைகள் பலவற்றை கற்றுக்கொடுத்த சிவலிங்கம் சிவகுமாரன் நடா சேரைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒருமுறை சுடரொளி பத்திரிகை நிறுவனத்துக்கு புத்திரசிகாமணி ஐயாவை சந்திக்கச் சென்ற போது அங்கே இருந்தார் நடா சேர்.

ஆம் அவர் சிறியதொரு அறையில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். சுடரொளியின் ஆசிரியபீட ஆலோசகராக அவர் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

மீண்டும் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

செய்தி என்றால் என்ன? எவ்வாறு செப்பனிடுவது? புதிதாக துறைக்குள் வருபவர்கள் விடும் தவறுகள் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை பேசினார்.
ஊடக துறையில் உள்ள வெட்டுக் குத்து, எப்படி சமாளிப்பது என்பவற்றையும் சிரித்துக்கொண்டே சொன்னார்.

தம்பி ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்.

பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தன்னுடைய செய்தியாளரை அரசியல் நிகழ்ச்சியொன்றுக்கு செய்தி சேகரிப்புக்காக அனுப்பினாராம்.

நிகழ்வில் யார் யார் வருவார்கள், யார்,யார் பேசுவதை நன்றாக அவதானித்து எழுதிக்கொள்ள வேண்டும், நிகழ்ச்சி தொடர்பாக எவ்வெந்த விடயங்களை கவனிக்க வேண்டும், நேரத்தை எப்படி குறித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்பினாராம்.

ஆர்வத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சில மணி நேரங்களுக்குள் பரபரப்பாக ஆசிரியரிடம் ஓடி வந்தாராம்.

சேர், நீங்கள் சொல்லிக்கொடுத்தது போல் என்னால் செய்தி சேகரிக்க முடியவில்லை என்றாராம்.

அதற்கு ஆசிரியர் ஏன் என்று வினவினாராம்.

சேர் நான் நிகழ்ச்சி பற்றிய செய்தி சேகரிக்கத்தான் சென்றேன். அங்கு குண்டு வெடித்துவிட்டது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று நீங்கள் சொல்லித்தரவில்லை. ஆதலால் பயத்தோடு ஓடிவந்துவிட்டேன் என்றாராம் செய்தியாளர்.

செய்தி சேகரிப்பதற்காக களத்துக்கு சென்றுவிட்டால் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். சிறு சிறு விடயங்கள் கூட நமக்கு உதவக் கூடும். இங்கே நான் கதையில் சொன்னது போல இருக்காதீர்கள் என்றார்.

அப்போது அவருடைய முகத்தில் சிறு புன்முறுவலும் இருந்தது.
ஆற்றலும் பண்பும் மிக்கவர்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பிறகு ஊடகவியல் கல்லூரியில் ஒருநாள் அவரை சந்தித்தேன். கதைக்கக் கிடைக்கவில்லை.

நடா சேர் போன்ற முன்னோரின் கடுமையான உழைப்பு, தூர நோக்கு, தமிழர் செல்நெறியை சிறப்பாக பேணியமை போன்றவை தான் இன்றும் நாம் ஊடகவியலாளர்களாக நின்று நிலைக்க காரணமாயிருக்கிறது.

நடா சேர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். உண்மையில் தமிழ் ஊடகத்துறைக்கு எப்போதுமே ஈடு செய்ய முடியாத இழப்பு இது.

நடா சேர் - உங்களோடு பழகிய பொழுதுகளை நான் பெருமையாக நினைக்கிறேன்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் பெயரும் சொல்லித்தந்த அறிவுரைகளும் எப்போதும் எம் மனதில் நிலைத்து நிற்கும்.

-இராமானுஜம் நிர்ஷன்

0 comments: