Todays Date:

நிவேதப்ரியா (02)

"சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது. சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்"

------------------------------------------------------------


1996.

நான் இயற்கையை முழுமையாக ரசிக்கத் தொடங்கிய காலம் । இயற்கைக்கும் மனிதனுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை தனிமையில் பலதடவைகள் சிந்தித்திருக்கிறேன்.

நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பதை தோண்டித் தோண்டிப் பார்த்த ஆவல்மிக்க அந்திநேரங்களை மறக்க முடியாது.

அதிகாலைச் சூரியன், சில்லென்ற காற்று, காட்டுச் சேவலின்கூவல், வீட்டுக்கு நேரேயிருந்த மலைமுகடு, அங்கு ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட காட்டு மரங்கள், புறாக்கூடு, உச்சியிலிருந்து பார்த்தால் தெரியும் அம்மன்கோயில், புல்வெளியற்ற மைதானம், தென்னைமரத்தடி, நிலாச்சாரல் என இன்னும் எத்தனையோ ஆலாபனைகள் என்னை இயற்கையின் மடியோடு கண்ணிமைக்கச் செய்திருந்தன.

மனிதனுக்கு பெருஞ்செல்வத்தையும் பேரமைதியையும் தருவதில் இயற்கை தவிர்ந்த பெருங்கொடை வேறெதுவும் இல்லை.

காலம் தள்ளிப்போய் முதல் பருவங்களை கடந்தபோதுதான் அறிந்தேன். இந்த இயற்கைக்கும் “பெண்” என்ற படைப்புக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்பதை.

அதுவும் பள்ளிப்பருவத்தில்…

பெண்ணுக்குள் பெருஞ் செல்வம் அடங்கியிருக்கிறது. அதைக்கொண்டு அவளால் பேரமைதியைத் தரமுடியும்.

1997.

“பிரியா”
பள்ளியில் அவளுக்குத்தான் முதலிடம். அவளருகில் நிற்பதற்குக் கூட போட்டிபோட்ட நாட்கள்…. திறமையும் ஆளுமையும் கடவுள்கொடுத்த கொடை.
அதற்கும் மேலாக…. அவள் அழகு!

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।

பிரியாவின் அசைவுகளும் ரசனைமிக்கன. வெறுமையுற்ற பொழுதுகளில் அவளை கவிதையாகக் கீறி மனதில் செதுக்கிக்கொண்டேன்.

சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது। சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அசைவுகளால் வசியச்செய்யும் அவள், அவளுக்கே தெரியாமல் என்னுள் சிற்பமாகிக்கொண்டிருந்தாள்.

"வானம் அந்திப்படும்பொழுதிலும்
உன் வருகை எனக்கு விடியலைத் தருகிறது

எதேச்சையாகக்கூட பார்க்கமாட்டாயா?
காதல் விமோசனத்துக்காக எத்தனை நாள் காத்திருப்பது?

இந்த விடலை நினைவுகள் விதையாக்கப்படுமானால்
வளர்ந்த பின் விருட்சத்தை எப்படி வீழ்த்துவாய்?

காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"

இவை,அவள் நினைவுகளால் என்குள் பிரவித்தவை.

அவள்மீது காதல் கொள்ளவில்லை. மாறாக ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்குள் இருப்பதாயும்
அது அன்பின் நிலைகள் எல்லாவற்றையும் தாண்டியதாயும் உணர்ந்தேன்.

அமைதியில் அமைதி இருக்கிறதென்பார்கள். தியானத்துக்காக கடவுள் சிலைகளை பார்த்திருப்பதன் யதார்த்தம் இதுதான். அமைதியிலிருந்துதான் அமைதி கிடைக்கிறது என ஓஷோ சொல்லியிருக்கிறார்.
"இல்லாததிலிருந்து உள்ளது தோன்றாது. உள்ளதிலிருந்து தான் உள்ளது தோன்றும்" என்கிறது சித்தாந்தம். அவள் அமைதியிலிருந்து எனக்கும் அமைதி பிறந்தது.

அவள் அதிகமாகப் பார்த்த இடம் அவளுடைய பெருவிரலாகத் தான் இருக்க முடியும்.

மனதின் மையப்புள்ளிகளை அறியமுடியவதில்லை. ஆழமான சோகத்திலும் அளவுக்கதிகமான சந்தோஷத்திலும் நிறைவாக மனம் களித்திருக்கும் வேளையில் எந்தச் செயல்கள் செய்தாலும் அந்த சோகமோ சந்தோஷமோ மனதின் ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து நம்மை வளப்படுத்துவதாய் உணர்ந்திருப்போம். அது அதிகமாய் உணரப்படுவதற்கு சிரமமானது.

அவளைப் பார்த்த பல பொழுதுகளில் அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நான் வாழ்ந்த காலங்கள்.
(தொடர்ந்து பேசுவேன்)

7 comments:

Anonymous said...

நிர்ஷ்

" காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்? "

உயிரோட்டமுள்ள இந்த வரிகளுக்கு தான் எத்தனை வலிமை. ஆயுள் தண்டனையான இந்த நினைவுகள் தான் இன்று பலரையும் வாழ வைக்கின்றது.சாதிக்க தூண்டுகின்றது.ஏன் இறந்த காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் முடங்கிப்போயிருந்த பலருக்கு முகவரியை கொடுத்ததும் இதே நினைவுகள் தான் என்பதை நீ ஏற்றுக்கொள்வாய் என நினைக்கின்றேன்

நிரு

Nimal said...

உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்...

உங்கள் 'வாழ்ந்த காலங்கள்' பற்றி தொடர்ந்து எழுதுங்கள்...!

இறக்குவானை நிர்ஷன் said...

நிச்சயமாக நிரு.

அழியாத நினைவுகள் நமது உலகத்தில் ஒரு காவியம் தானே?

இறக்குவானை நிர்ஷன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன் நிமல்.
தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம்.

Anonymous said...

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।


yar ival?

Durga Rajendren said...

உங்கள் எழுத்துக்கள் உளியாகி எங்கள் உள்ளங்களை செதுக்குகின்றது,
தொடர்ந்தும்.........அப்படியே ஆகட்டும்............!!!
கதையின்முடிவு...!!!
அது வேண்டாமோ எனத் தோன்றுகின்றது.
உங்கள் எழுத்துக்கள் உளியாகி எங்கள் உள்ளங்களை செதுக்குகின்றது
தொடர்ந்தும்.........அப்படியே ஆகட்டும்.
கதையின்முடிவு...!!!
அது வேண்டாமோ எனத் தோன்றுகின்றது........!
ஒவ்வொறு வரிகளிளும் சுவாரஸ்யம் நிறைந்திறுக்கின்றது
...........மெய்யன்போடு வாழ்த்துகின்றேன்...........

Anonymous said...

ungal eluthukkal nanraga ulathu....thodarnthu eluthngal... manthil ula ennangalai kuda eluthaga varya elaralum iyalvathilai athu kadvul kodutha varam......