Todays Date:

அன்னை என் தெய்வம்







விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா (V)

ஆமாம்..! அவளை அடைய முடியாது என்று தெரிந்தும் மனம் ஏன் இப்படி தூண்டில் புழுவாய் துடித்துப்போகிறது என பல சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.

மணவறையில் சந்திக்க முடியாத அவளை மனவறையில் வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன என தனிமையில் சிந்தித்ததுண்டு.

விதைக்கப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்ட காதல் என்னுடையது. ஆழமான அன்பினைக் கொண்டு தனியறை சமைத்து நினைவுகளோடு வாழும் நிந்திக்கப்பட்ட உயிர் என்னுடையது.

சடப்பொருள் என்றால் திரைகொண்டு மறைக்க முடியும். சுவாசத்தில் கலந்து ஜீவனின் அத்தனை அந்தரங்ககளையும் சூழ்ந்து நரம்புகளெங்கும் விரிந்து மனதில் புடைத்துக் கிடக்கும் காதலை எங்ஙனம் மறைப்பது?

மொட்டை மாடித் தனிமையில் விடைகிடைக்குமா என சிந்திக்கத் தொடங்கினேன்.

அவளிடமிருந்து விலகிச் செல்வதுதான் சரியான முடிவு என்பதை ஆழ்மனது தீர்மானித்தது.

அதற்காக என் காதலை புதைத்துவிடத் தீர்மானித்து விடியலுக்காக காத்திருந்தேன்.

அப்போதைய மனதின் கீறல்கள் இவை.

ஓர் உண்மை வாசகம்



கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்

மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…

பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…

உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….

இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது

மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்

கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்

கோடி பூக்களோடு
நீ – என் வானில்

பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு

‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’



விடிந்தது அவள் அழைப்போடு..!

நினைவுகளோடு உறங்குவதும் காலையில் கைத் தொலைபேசியில் அவள் பெயர் பார்த்து ஹலோ சொல்லுவதும்….

ஆக… எத்தனை நாளைக்கு துடித்துத் துடித்து என்னையே நான் துண்டாடுவது?

காதலை காலனுக்கு அர்ப்பணித்து அன்புக்கு விடைகொடுக்கும் நேரத்தை அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு…பன்னிரு வருடங்களுக்குப் பிறகு…

எந்த வார்த்தையும் நேரடியாகப் பேசியதில்லை. எந்தச் சந்தர்ப்பதிலும் எமது பார்வைகள் சில நொடிகளுக்கு மேல் நீடித்துக்கொண்டதில்லை.

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?

பிஞ்சுக் குழந்தைக்கு பேச்சுக் கற்றுக்கொடுப்பது போல்… மனம் அல்லாடித் தள்ளாடியது.

இடம்,நேரத்தை தீர்மானித்து ஒருவாரத்தின் பின்னர் சந்திப்புக்கான விடியலும் விடிகிறது.

குளிர்ச்சியான சூரியன், மென்மைத் தென்றல், காரணமின்றிய முறுவல், நேரத்துக்கு நேரம் இதயத் துடிப்பில் மாற்றம்….என அத்தனையும் என்னை இறுகக் கட்டிப்போட்டன.

தலையணை மந்திரம்போல் அவள் ஒருவார்த்தையில் நான் கட்டுண்டுவிட்டால்….?

அதென்ன தலையணை மந்திரம் எனக் கேட்கிறீர்களா?

குடும்பத் தலைவன் எப்போதும் வேலைப்பளுவில் தான் இருப்பான். காலையில் சம்பிரதாய முறைப்படியான தொழில். மாலையில் வீடு. இரவில் மறுநாளைக்கான சிந்தனை…. இப்படி அவனது சிந்தனைகள் ஆழமாக மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

குடும்பத் தலைவிக்கு ஏதாவது தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதனை கணவரிடம் வெளிப்படையாகச் சொல்லச் சிரமப்படுவாள்(அந்தக்காலத்துப் பெண்). ஏதாவது முக்கியமான தேவை இருக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் தந்திரமான மந்திரம் தான் இந்தத் தலையணை மந்திரம்.

அதாவது கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது. இருவருமே ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பார்கள். அப்போது மனைவியின் மீது அதீத அன்பினையும் பிணைப்பினையும் கணவன் கொண்டிருப்பான்(ஆய்விலும் நிரூபிக்கப்பட்டது).

உடலுறவின் பின்னர் தன் கணவனை தலையணையோடு வாரியணைத்து தனது தேவையை சொல்லுவாளாம் மனைவி. அந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் சொன்னாலும் கணவன் தலையாட்டுவானாம்.

அதுதான் தலையணை மந்திரம். அது பலிக்கும் என்பது உண்மை எனச் சொல்கிறார்கள். எழுத்தாளர் சுஜாதா பல சந்தர்ப்பங்களில் இதைச் சொல்லியிருப்பார்.

(தொடர்ந்தும் பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

விரிவாக படிக்க ……..

“கொழும்புச் சாமியார்”

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொண்டுவரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆசாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

ஒரு பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் பெரிதாகப் பிரபலமில்லாத ஆனால் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது.
உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி…..
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?
சமப்ரப….
நிர்விக்னம்
இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ.
குருமே தேவ
நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ
சர்வ கார்யேஷ் ஷர்வதா”

சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?
எனக் கேட்கத் தோன்றும்.

இளம் பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக்கொண்டிருக்கும் போது நாம் எம்மாத்திரம் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை.வீட்டிலும் நியாயமில்லை. எனக் கோயிலுக்கு செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் தான் என்ன?

விரிவாக படிக்க ……..