Todays Date:

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

விரிவாக படிக்க ……..

“கொழும்புச் சாமியார்”

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொண்டுவரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆசாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

ஒரு பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் பெரிதாகப் பிரபலமில்லாத ஆனால் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது.
உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி…..
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?
சமப்ரப….
நிர்விக்னம்
இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ.
குருமே தேவ
நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ
சர்வ கார்யேஷ் ஷர்வதா”

சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?
எனக் கேட்கத் தோன்றும்.

இளம் பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக்கொண்டிருக்கும் போது நாம் எம்மாத்திரம் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை.வீட்டிலும் நியாயமில்லை. எனக் கோயிலுக்கு செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் தான் என்ன?

விரிவாக படிக்க ……..

“மண்ணுக்குள் இருக்கும் என்னை அகழ்ந்து கோயில் எழுப்புங்கள்”

இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோருக்கு இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மிகப் பழைமையான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னும் அழியாமல் இருப்பது இறை சக்தி என்றே கணிப்பிட முடியும்.

திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை “கொனா கோவிலய(நந்திக் கோயில்)” என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்கு சான்றாக விளங்குகிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.

இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

இந் நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளதுடன் அவருடைய மகனை வேறு மதத்துக்கு மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலை பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக இன்றுவரை அந்தக் குடும்பத்தினர் கோயிலை பராமரிக்கின்றனர்.

போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.

1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி சலலிஹினி சந்தேசய எனும் காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.
இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு நிலையத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்திருக்கிறார்கள். அந்த ஆலயத்தில் கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கதிர்காமக் கந்தனுக்கு எடுக்கும் பெருவிழாவாக பல்வேறு விழாக்கள் இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் 1980 களில் பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிகால எழுத்தக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்களின் தீர்த்தமாக அந்தக் குளம் இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அதன் பின்னர் இந்த ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இந்த ஆயத்துக்கு அந்த குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.

தற்போதும் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி உள்ளிட்ட ஏனைய அகழ்வுகள் பக்தியுடன் ஆலயத்தில் பேணப்படுகின்றன.


எழுத்தில் ஆதாரபூர்வமாக எதுவும் காணப்படாத போதிலும் அகழ்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகள் இந்த ஆலயத்தின் பழைமையை எடுத்துக்காட்டுகின்றன. பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் காரைநகரைச் சேர்ந்த திருமதி கனகசபை கோயில் திருப்பணிகளை முன்னின்று செய்துவருகிறார்.


ஆலய தலவிருட்சம்

கண்டெடுக்கப்பட்ட அகழ்வுகள்

கண்டெடுக்கப்பட்ட ஆவுடை
நந்தி

சோர்த்துக்கேயரின் தாக்குதல் சித்திரமாக...

கட்டப்பட்டுவரும் ஆலயம்

ஆலயத்தின் தொன்மைத் தன்மை சிதைக்கப்படாதவண்ணம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் இந்த ஆலயத்தின் வரலாறு சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்
(தங்கை துர்காவின் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவிட்டுள்ளேன்)

விரிவாக படிக்க ……..