Todays Date:

நிவேதப்ரியா IX

"காதல் கண்ணீராய் பூக்கிறது..!"

அது பௌர்ணமி நாளொன்று!
நிறைந்த நிலவு உலகை ஆட்கொண்டிருக்க என் மனதை மட்டும் மௌனம் ஆக்கிரமத்திருந்தது.
எழுதத் தொடங்கினேன் அவளுக்காக!
எந்த செம்மைப்படுத்தல்களும் இல்லாமல் அவ்வாறே இங்கு பதிவிடுகிறேன்..!

என் உயிருக்கு,
நீ நலமாயிருக்கிறாயா எனக் கேட்க முடியாது? நீயின்றி நான் வெறும் ஜடம் தான்.
நீண்டு நெடிதாகும் இரவுகளில் நிசப்தங்களை சுமப்பதற்குப் பதிலாக உன் நினைவுகளை ஏந்திச் சுகம்காணும் எனக்கு இன்று எழுத நேரம் கிடைத்திருக்கிறது.
எத்தனை நாளைக்குத் தான் புகைப்படத்தில் உன் கண்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது?
எத்தனை நாளைக்குத் தான் நீ தந்த கவிதைகளை எழுத்துக் கோர்த்து வாசிப்பது?

எங்கோ இருந்துகொண்டு நீ என்னை நினைப்பதை அறிந்துகொள்ளும் என் மனதுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது என யோசித்ததுண்டு.

எல்லாம் ஏதோ ஒரு வகை ஈர்ப்பு, வார்த்தைகளில் சொல்ல முடியாது அன்பு, அன்பையும் தாண்டி எங்களை ஆட்படுத்தும் அமானுஷ்யம்!

ம்ம்ம்...

உன்னோடு பேசும்போது நிறைய சொல்ல வேண்டும், என் அன்பையெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனாலும் நீ என்ன நினைப்பாயோ என்ற கேள்வி அதற்கு தடைபோட்டு விடுகிறது.

உயிரே,

இப்போதெல்லாம் என் வேண்டுதல் என்ன தெரியுமா? இறப்பதற்கு முன் உன்னை ஒருமுறை பார்த்து ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும், உன் கரங்களை இறுகப்பற்றியவாறு நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதுதான்.

அலுவலகத்தில் வெள்ளைத் தாள்களை எடுத்து கட்டுரைக்கான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு எழுதி வைத்திருந்த பழைய குறிப்புகளை எடுத்துப் பார்த்தபோது ஒவ்வொரு தாளின் வலதுபக்க மேல் மூலையிலும் உன் பெயர் சிறிதாக எழுதப்பட்டிருக்கிறது.


ஆம்! பல சந்தர்ப்பங்களில் என்னை அறியாமலேயே உன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.

நீயும் நானும் வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் நம் மனதுக்கு இடையிலான இடைவெளியில் காற்று கூட புக முடியாது.

உன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும்போதெல்லாம்- நீ இறுதியாக என்னை அழைத்த வார்த்தைகள் காது மடல்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். 

நீ உச்சரிக்கும்போது மட்டுமே என் பெயரை நான் ரசிக்கிறேன்.

அநேகமான பொழுதுகளில் அந்த இனிமையான குரலை அசைபோட்டபடியே நித்திரையாகியிருக்கிறேன்.

நீலவானம், தென்றல், மழைத்தூரல், வயல்வெளி, ஒற்றையடிப் பாதை, தனிமரம், மூன்றாம் பிறை, மலைமேடு, சிலா விக்கிரகம், படர்ந்த கற்பாறை, மெல்லிசை என மனதுக்கு இதமான எல்லாமே உன்னை நினைவுபடுத்தத் தவறுவதில்லை.

ஒருவரைப்போல ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பார்களாம். ஆனால் உனக்கு நிகர் நீயே தான்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது என் இதயத்தில் தேங்கிக் கிடக்கும் காதல் கண்ணீராய் பூக்கிறது.

என்ன செய்வது? நம் பிரிவை விதியென்று நொந்துகொள்ள நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாய் பிரசவித்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் நதிகள்.

கடலில் சங்கமிப்போம். அது மரணமானாலும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் உயிர்துறக்கும் தருணத்திலும் உன் மடி போதுமெனக்கு, சிரித்துக்கொண்டே இறந்துவிடலாம்..!

-அன்புடன்
உன்னவன்.

2 comments:

Anonymous said...

உங்கள் எழுத்துக்கள் பிரமாதம். ஆழமான காதல்.
ஏன் நீங்கள் ஒரு கவிதை புத்தகமாவது வெளியிட முயற்சி செய்யக்கூடாது?

இறக்குவானை நிர்ஷன் said...

ஆழமான காதல் மாத்திரமல்ல. அர்த்தமுள்ளதும் கூட. அவள் இமைப்பதைக் கூட கண்ணிமைக்காமல் ரசித்துக்கொண்டிருக்கலாம்.

நூலாக வெளியிடும் ஆசை உண்டு. முயற்சி செய்கிறேன். கருத்திட்டமைக்கு நன்றி.