Todays Date:

கனவில் எழுதிய கவிதை!



அதுஒரு நிலாப்பொழுது

தனக்கு எட்டிய தூரம்வரை வெண்ணொளிபாய்ச்சி
வெள்ளிமழையில் உலகத்தை நனைத்துக்கொண்டிருந்தது நிலவு.

இரவுதேவதை முழு உலகத்தையுமே ஆட்கொண்டு
மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது.

அந்தி மஞ்சளைக் குழைத்து
மல்லிகை மணத்துடன் செய்யப்பட்ட
தங்கச்சிலையாய் வந்து நிற்கிறாய்.

ஒற்றைப்பார்வையில் இலேசாக இதழ்விரித்து நீ புன்னகை பூக்கையில்
அதனை முழுமையாக உள்வாங்கிய என் உயிர்
இரகசியமாக அதனை உணரத் தொடங்கியது.

தங்கப்பட்டாடை அணிந்த வெள்ளை ரோஜாவாய் கன்னம்சிவக்க நடந்துவந்தாய்.

அருகில் வருகிறாய்.
என் சுவாசம் முழுவதும் உன் வாசம்.

உன் சுவர்ணத்தொடுகைக்காக காத்திருக்கிறேன்.

அழகுதேவதையின் சிங்காரமான கட்டழகு
என் அத்தனை பலத்தையும் கட்டவிழ்த்துப்போட்டது.

ஜன்னல் நிலவொளியில்
வெள்ளித் தகடாய் ஜொலித்த நீ
மின்மினியாய் கண்சிமிட்டிச் செய்த சமிக்ஞைகள்
ஆழ்ந்த இன்பத்துக்கு அத்திவாரமிட்டன.



இந்த பூமியே சிதறிப்போனாலும் உன்னைமட்டும் என்னிலிருந்து விலகாமல்காப்பேன்
என என் மனது உள்மனச்சாட்சியிடம் உறுதிபூண்டுகொண்டது.

மேகத்தை ஒன்றுதிரட்டி செதுக்கிய ஆதர்ஷனச் சித்திரம்போல அருகில் வந்து என்
கண்களைப் பார்க்கிறாய்.

இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!

இரவுவரும்
அதே நிலவும் வரும்
நீ வருவாயா?

-கனவுகளின் வரிகளுடன்
இறக்குவானை நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

மரணத்தோடு விளையாட்டு ! (வீடியோ)



விரிவாக படிக்க ……..

என்னைத் தொலைத்த நான்..!



மெழுகுவர்த்தியில் அவள்
முகம்பார்த்துப் பின்
பேனை பிடித்து – அந்த
மனோகரத்தை வரையும்
வேலையில்லாதவன் நான் ..!

கண்திரை மூடும்போதும்
நித்திரை வேண்டாமென
நித்தம் உன்
நினைவில் வாடிய
ஜீவனில்லா ஜடம் நான் ..!


அல்லிப்பூவின் இதழ்கொண்டு
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி
கடலைத்தூற்றி
கரையை அணைத்த
பைத்தியக்காரன் நான் ..!

மனோகரத் தோற்றத்துக்கு
மணிமணியாய் வார்த்தை தேடி
தமிழில் வார்த்தை கொஞ்சம் என
ஒருவரியில் பொய்சொன்ன
பொல்லாதவன் நான் ..!

துணையாய் இருப்பாயென நம்பி
தோள்கொடுத்த
தோழனை தூக்கியெறிந்து
தனிமையில் தவித்த
துரதிர்ஷ்டசாலி நான் ..!

நெஞ்சம் செய்யும்
கபளீகரத்தில்
தாயின் நெருடலை
தொல்லையென்றொதுக்கிய
துர்மனக்காரன் நான் ..!

மொத்தத்தில்
காதலுக்காக
வாழ்வை இழந்து
காதலிக்காக
என்னை இழந்த
உதாரணவாதி நான் ..!



-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

நினைவுகளின் சுவடுகள்…!

அந்த இடம் எப்படியிருக்கும்? எல்லாவற்றுக்கும் எவ்வாறு முகம்கொடுப்பது? எவ்வாறு சமாளிப்பது? யார் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்?
காய்ச்சல் என்றால்… தலைவலியென்றால்…
இப்படி ஆயிரம் எண்ணவோட்டங்கள் மனதுக்குள்.

அன்று 2002.10.27. உறவினர்கள் நண்பர்களிடம் விடைபெற்று மனதோடு மட்டும் கதைத்துக்கொண்டிருக்கிறேன்.

வெறிச்சோடிக்கிடந்தது வீடு. ஏன் என் மனதும்கூடத் தான். மலையோரப் பகுதி என்பதால் தென்றலின் அரவணைப்பில் எப்போதும் வீடு சில்லிட்டிருக்கும். சோகங்களைக் கூட சுகமாய் அனுபவிக்க வைக்கும் அந்தத் தென்றல் கூட அன்று சூடாய்ப் பட்டது.
அம்மாவின் முகத்தில் இனம்புரியாத சோகம். அடிக்கடி என்னை வந்து பார்ப்பதுமாய் போவதுமாய் இருந்தாள். விடியல் இல்லாத இரவாய் அந்த நாள் இருந்துவிடக்கூடாதா? எனக்கு போகப்பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவதா? பயமாயிருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்ற அபரிதமான எண்ணங்களும் மனதில் உதித்தன.

நிறைந்த கணமான நினைவுகளுடனும் அச்சம் கலந்த ஏக்கத்துடனும் அன்றைய நாள் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. உலகை இருள் ஆட்டிப்படைக்க இருளை நிசப்தம் தன்வப்படுத்தியிருந்தது. எனினும் வீட்டின் கடிகார முள் மட்டும் நிமிடத்துக்கு நிமிடம் நிசப்தத்தைக் களைத்து என் உயிரையும் தட்டிவிட்டுக்கொண்டிருந்தது.

அடிக்கடி எழுந்து பார்த்தபோதெல்லாம். அம்மாவும் என்னருகில்... உறங்காமல்…

அதிகாலை 2.45. அம்மாவின் சுமையான குரல் என்னை எழுப்பிவிட்டது.

அதற்குள் விடிந்துவிட்டதா?
அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாதவனாய் எழுந்துசெல்கிறேன்.
அப்பாவும் ஏதோ யோசித்த வண்ணம் சாலையில் உட்கார்ந்திருக்கிறார்.

கடன்களை முடித்துக் குளித்தபோது கண்ணீர் வழிந்து தண்ணீரோடு கரைந்து சென்றது.

நான் ஆயத்தமாகிவிட்டேன். அப்பா வாங்கித்தந்த உடை என்னை திடகாத்திரமாக காட்டியபோதும் மனது இன்னும் விடலைப் பக்குவத்திலேயே இருந்தது. என்னைத் தேற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தபோது அம்மா கணத்த பையைத் தந்தார். ஒரு மாதத்துக்குத் தேவையான உடை,சவர்க்காரம்,சீப்பு, எண்ணெய், ஊசி என அனைத்துமே இருந்தன.

எனக்குப் பிடித்த கறிவகைகளைச் சொல்லி “பிடிச்ச எல்லாமே சமைச்சு வச்சிருக்கிருக்கிறேன். மத்தியானத்தில் சாப்பிடுங்க” என்று முதல்நாள் இரவுக்குப் பிறகு இரண்டாவது வசனத்தைப் பேசினாள் அம்மா.

எப்படியிருக்க வேண்டும். எப்படிப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். எல்லாவற்றிலும் கவனம் தேவை. மேற்படிப்பு அவசியமானது. கவலைகள் வேண்டாம். பஸ்ஸில் மிதிபலகையில் செல்லவேண்டாம், யாருடனும் சண்டை போடக்கூடாது, கோயிலுக்கு அவசியமாக போக வேண்டும் என ஏகப்பட்ட விடயங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் அம்மா.

கடைக்குப் போகும்போது கூட அம்மா அப்பாவின் காலில் விழுந்துவணங்கிச்செல்லும் வழக்கம் எனக்கு உண்டு. அப்போது ஏற்படாத பதற்றம் அன்று எனக்கிருந்தது. அம்மாவின் பாதங்களில் விழுந்து வணங்கியபோது கண்ணீர் வடிந்தது. சுமார் இரண்டரை நிமிடம் வரை காலடியில் எழமுடியாமல் இருந்தபோது அம்மாவின் நடுங்கிய கரங்களால் என்னைத் தூக்கிகிவிட்டு கட்டியணைத்துக்கொண்டபோது அம்மா அழுத விதம் இன்னும் நினைவில் இருக்கிறது.

ஏன் நான் போகவேண்டும்? வீட்டிலேயே இருந்துவிடலாமே என உள்மனது சொல்ல அதனை அழுகையால் கட்டுப்படுத்தி அம்மாவின் அணைப்பிலிருந்து என்னைத் தவிர்த்து திரும்பியபோது அப்பா என் முகம்பார்க்க முடியாதவராய் அழுதுகொண்டிருந்தார்.

வார்த்தையில்லை. வேகமும் இல்லை. அப்பாவிடம் எப்படி விடைபெற்றேன் என்றே தெரியவில்லை. அதுவரை கதைக்காதவர் "கவனமாய் இருக்கனும் மகன்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிட்டார்.

4.15 மணிக்கு பஸ் புறப்படும்.

அவசரமாய்ச் செல்ல வேண்டும் என்பதால் முற்றத்து மல்லிகைச் செடியிடம் ஒரு பூவைக் கடன் வாங்கி கைக்குள் அடக்கிக்கொண்டு வீட்டை முழுவதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
அம்மா அப்போதும் அழுதுகொண்டிருந்தார்.

அப்பாவுடன் பஸ்நிலையத்துக்கு நடந்துவரும்போது நான் படித்த பரியோவான் பாடசாலை, மாரியம்மன் கோயில்,ரீச்சர் வீடு என எல்லாமே என் பழைய நினைவுகளை மீட்டி விடைகொடுப்பதாய் உணர்கிறேன்.

பஸ் வண்டி புறப்படுகிறது. இருளாய் இருந்த போதும் முடிந்தவரையில் ஊரை முழுமையாக பார்க்க எத்தனித்து அப்பாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவனாய் விடைபெறுகிறேன்.

அம்மாவிடம் பிடித்த சண்டைகள், அப்பாவுடன் கோபப்பட்ட விதம், குறும்பு விளையாட்டு, நண்பர்களின் அரட்டை, பள்ளிக்காலம், கோயில் விழாக்கள், விளையாடியது, விழுந்தது,மேடை நாடகங்கள்,கவிதைப்பரிசு என எல்லாமே ஒருகணம் மனதில் நிறைந்து மறைந்துபோகின்றன.

அப்போதைய பயணமும் வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான் என தேற்றியவாறு நேற்றைய களைப்பில் தூங்கிப்போகிறேன்.
மீண்டும் விழித்தபோது கதிரவனின் உதயம் என் கண்கூசச் செய்தது.

ஆம் ! நான் வேலைக்குப் போகிறேன்.
என் இலட்சியத்துக்காக நான் கொழும்புக்குப் போகிறேன் என்ற உணர்வு அப்போதுதான் என்னைத் தட்டியெழுப்பியது போன்று உணர்ந்தேன். அண்ணா அங்கு இருக்கிறார் என்ற ஆறுதல் என்னை கொழும்பு வரை கூட்டிவந்தது.

-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை

விரிவாக படிக்க ……..

மீண்டும் உயிர்த்தெழுகிறேன் !

மனதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி. உயிரில் கலந்திருக்கும் தமிழார்வம் மேலும் பிரவாகப்பட்டு நெஞ்சுநிமிரச்செய்தது போன்ற புத்துணர்ச்சி. இதுவரைக்கால கபளீகரத்துக்கு விடைகொடுத்து ஆரிடை நடைதேடும் இலட்சிய வேகம் என்பவற்றுடன் புதிய பக்கத்தில் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்.
இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தது முதல் பல பிரச்சினைகள் உருவெடுத்தபோதும் என் சுயஆக்கங்களை எழுதிவந்தேன். தற்போது கட்டாரில் வசிக்கும் இறக்குவானை மண்ணின் சிறந்த தமிழார்வலர்களில் ஒருவரான நண்பர் விக்கி எனது வலைத்தளத்தை மேலும் மெருகேற்றித்தருவதாக உறுதியளித்து செய்துதந்தார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு மாதகாலத்துக்கும் அதிகமாக எதனையும் எழுத முடியவில்லை. மாமா, மாமி இருவரும் அடுத்தடுத்த மாதங்களில் இறையடி சேர்ந்தமை, நான் பெரிதும் நேசித்த கையடக்கத் தொலைபேசி களவாடப்பட்டமை, சில அரசியல்வாதிகளின் உட்பூசல் எதிர்விளைவுகள், அலுவலக வேலைப்பளு, வீட்டு வேலைகள் என்பவற்றால் இணையத்தில் நேரம் செலவுசெய்ய முடியாதிருந்தது.
வலைத்தளம் மீளமைக்கப்பட்டதில் எனது அறிமுகப்பதிவு உள்ளிட்ட பல பதிவுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. வருந்துகிறேன்.
தொடர்ந்தும் தரமான ஆக்கங்களை தரமுயற்சிக்கிறேன்.எனது புதியமலையகம் http://puthiyamalayagam.blogspot.com/ வலைத்தளத்திலும் தொடர்ந்தும் எழுதத் தலைப்படுகிறேன்.
இந்தக் குறுகிய காலத்தில் என்னோடு ஒத்தாசைபுரிந்து தோள்கொடுத்து துன்பம் தீர்த்த அனைத்து நண்பர்ளுக்கும் நன்றிபகிர்கிறேன்.

'வாழ்தலை சாதல் நிறுத்தச்செய்யினும்
சாதலால் வாழ்ந்ததை உரைக்கச்செய்வோம்.

-அன்போடு
இறக்குவானை நிர்ஷன்

விரிவாக படிக்க ……..