Todays Date:

"வேலை இல்லாதவேளை"


என் கறுப்புவானத்தை
ஊடறுக்கும்
வலிக்கும் தென்றல்!

மனவெளியெங்கும்
நெருப்பு சுவாசம்!

கறைபடிந்த பார்வைக்கோலங்களில்
குழிநிறைந்த தடயங்கள்!

தொட்டதெல்லாம் பட்டுப்போவதாய்
எண்ணங்கள்
விட்டுப்போகாமல் தொடரும்
துன்பங்கள்

இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்

உதவிக்கு அழைப்பதாயெண்ணி
தொலைபேசியை
புறக்கணிப்பவர்கள்
மறுபக்கம்

"வேலை இல்லையாமே"
கிண்டல் பேச்சுடன்
இன்னொரு கூட்டம்

"எப்படி இருந்தாய்?"
இறந்ததை
நினைவூட்டும்
எதிர்வீட்டின் சாட்டம்

"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்

“சனி நேரம்
கூடாத காலம்”
எதிர்பார்ப்புகளை சிதைக்கும்
வார்த்தைகளும் தாராளம்

மறுவேளை உணவுக்கு
மண்டியிட முடியாமல்
தடுக்கும்
தன்மானம்

“நம்பவைத்துக் கழுத்தறுத்தானே”
- ஈசனைத்தூற்றியழும்
மனோபாவம்

வேலை இல்லாதவேளை -
உணர்தலுடன்
ஒரு புரிதல்

இல்லாதவொன்றுக்கு
எல்லாவற்றையும்
காணிக்கைபடுத்திப்பார்த்திருக்கிறேன்
காலச்சுவடு
காயங்களை
ஆற்றுப்படுத்தும்வரை..!

-ஆர்.நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

காலம் கடந்தும் வாழும் 'காதல்' எனும் மந்திச்சொல்..!




அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத்தூண்டும் ஆழத்தோடான புனிதமான உறவு காதல்.

இந்தக் காதலுக்கு மகுடம் சூட்டும் நாளாக மேலைநாட்டுக் கலாசாரத்தில் உருவானது தான் காதலர் தினம். ஒவ்வொரு வருட பெப்ரவரி 14 ஆம் திகதியும் கொண்டாடப்படும் காதலர் தினம் கீழைத்தேச இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்துவருகிறது. வியாபார நோக்கில் மேலைத்தேயர்களின் சுயதந்திரத்துக்காக உருவாக்கிய தினம் என்றும் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது என்றும் குறிப்பிட்ட சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் காதல் என்பதை கறுப்புக்கண்ணோட்டத்தில் பாராமல் ஆழமான அன்பின் அடித்தளமாக நோக்குபவர்கள் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
காதலர் தினம் உருவான விதம் பலவிதமாக கூறப்படுகிறது. செவி வழியிலான கதைகள் அதிகம் பேசப்படுவதுடன் ரோமானிய பாதிரியாரின் கதை எழுத்துருவில் உள்ளதாக கூறப்படுகிறது.

கி.பி. 270 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் ரோமானியாவை ஆண்ட சக்கரவர்த்தி அங்கு நடைபெறும் திருமணங்களுக்குத் தடைவிதித்திருந்தான். ஆண்கள் பெண்களைப் பார்த்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதனை மீறியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுவந்தது. ஆண்கள் காதலிப்பதால், மணம் செய்வதால் இராணுவத்தில் சேர்வதில்லை என்றும், இது ரோமானிய இராணுவத்தை பலப்படுத்துவதற்கான திட்டம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வலண்டைன் என்ற பாதிரியார், சக்கரவர்த்தியின் கட்டளையையும் மீறி பலருக்குத் திருமணம் செய்துவைத்தார். காதலர்களை சேர்த்துவைத்ததால் பாதிரியார் மீது அந்த மக்கள் அதிக அன்பு கொண்டிருந்தனர். இதனை அறிந்துகொண்ட சக்கரவர்த்தி சிறைத்தண்டனை வழங்கியதாகவும் பெப்ரவரி 14 ஆம் நாள் அவரை கல்லால் அடித்து சித்திரவதை செய்து கொன்றதாகவும் சொல்லபபடுவதுடன் காதலர்களின் அன்பை மதித்தமையால் வலண்டைன் பாதிரியார் இறந்த தினம் பின்னாளில் வலண்டைன் எனும் காதலர் தினமாக அது அறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் காதல் என்பதற்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை நாமறிவோம். காதல் என்ற விடயத்தைப் பற்றிக் கதைத்தாலே பெற்றோரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்பது காலத்தால் மாற்றமடைந்த ஒன்றாகும். கலாசராத்தோடு ஒன்றி வாழ்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு தவறான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது.

பொருத்தமான துணையை பொருத்தமான மறு துணை அடைவதில் தவறில்லை. அவ்வாறு தேர்ந்தெடுப்பதில் தான் பிரச்சினை இருக்கிறது. பள்ளிப்பருவ காதல், பஸ்தரிப்பிடக் காதல், முன்வீட்டுக்காதல், மொட்டை மாடிக்காதல்… என நினைத்த மாத்திரத்தில் காதல்கொண்டு புணர்ந்து காணாமல்போவதற்குப் பெயர் காதல் அல்ல. அன்பின் புனிதத்துவம் கெடாமல் காலம் உணர்ந்து காத்திரமான உறவாக வளர்ந்து புரிந்துணர்வு விட்டுக்கொடுப்புடன் மிளிரும் காதல் பெற்றோருக்கும் கட்டுப்படும் என்பதில் ஐயமில்லை.

தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம் முதல் ஐம்பெருங்காப்பியங்கள் அடங்களாக இலக்கியங்கள் இதிகாசங்கள் காதலையும் காதலின் உணர்நிலையை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. ‘காலத்தின் கண்ணாடி இலக்கியம்’ என்பார்கள் அவ்வாறின், காதல் பழங்காலம்தொட்டு மனித உள்ளங்களில் நின்று நிறைகின்றமை தெரிகிறது.

ஆக, காதலிப்பது தவறா? காதல்கொள்வது தவறா? அல்லது காதல் தவறா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாணவேண்டிவருகிறது. காதல் தவறு என்பது எங்கினும் குறிப்பிடப்படவில்லை. அது தவறு என்று சொல்வதற்கும் இல்லை. திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போன்று முகம்காணாத ஒருவரை இலேசாக உரசிச்செல்லும்போது கண்ணும் கண்ணும் பார்த்துக்கொண்டு மறுநாள் காமத்தில் மூழ்கிவிடுவது தவறான கண்ணோட்டடாகும்.
வெறுமனே பார்த்தல், பழகுதலில், பேசுதல் மாத்திரமன்றி ஒருவருக்கொருவரின் புரிந்துணர்விலும் விட்டுக்கொடுப்பிலும் காதலின் அடித்தளம் அமைகிறது. இது திருமணத்தின் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். திருமணத்தின் முன்னர் தான் காதல் என்றும் காதலின் இலட்சியம் திருமணம் தான் என்பது பல இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது. உண்மையான காதல் மரணித்தும் கூட வாழ்கிறது. ஏனென்றால் உயிரில், உணர்வுகளில் உயிரோட்டமாய் மாறி மனதின் அத்தனை மையங்களையும் அன்பால் கட்டுறச்செய்து சுவாசம் போன்று தொடரும் காதல் மரணித்த பின்னும் மணம் கொள்கிறது.

ஒவ்வொரு இளைஞனுக்கும் இலட்சியம் உண்டு. அந்த இலட்சியத்துக்காக பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கிடையில் உருவாகும் காதல் அவர்களுடைய உயர்ந்த இலட்சியத்தை பாதிக்குமாக இருந்தால் அல்லது அந்த இலட்சியத்துக்கு முழுத்தடையாக இருக்குமென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காதல் செய்யும்போது தம்மை காவியங்களின் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நினைத்து யதார்த்தத்தை மறந்து களிக்கும் காதலர்கள் எத்தனை பேர் தமது இலட்சியம் பற்றிச் சிந்திக்கிறார்கள்?
மற்றும் காதலர்களின் வழியில் பெற்றோரை எதிரிகளாக பார்ப்பதும் பெற்றோர் காதலை நஞ்சென்று நோக்குவதும் பற்றி பார்த்தல் வேண்டும்.

குழந்தை பிரசவமானதும் தாயானவள் அந்தக் குழந்தையை பற்றியும் அந்தக் குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் கனவு காண்கிறாள். தந்தையின் கடமை குறித்தும் உணர்கிறார்கள். இந்நிலையில் பிள்ளை வளர்ந்ததும் காதல் கொள்வதால் தவறான வழிக்கு இட்டுச்செல்லப்படுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதுவே பின்னாளில் எதிர்ப்பாக மாறுகிறது. திரைப்படங்களில் காதலையும் காதலர்களையும் ரசிக்கும் பெற்றோர் நிஜ வாழ்க்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனினும் ஆழமான அன்பினை வெளிப்படுத்துவதாக அமைந்து பெற்றோர் கண்ட கனவு களையாத விதத்தில் தேடப்பட்ட துணையை பெற்றோர் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதே நேரம், பெற்றோரின் மனநிலை பாதிக்கப்படாத விதத்தில் தமது காதல் துணையை தேடிக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இவ்வளவு காலம் குறையின்றி, பேணிப்பாதுகாத்த பெற்றோரின் மனம் காதலால் நோகடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
மேல்நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது காதலர் தினம் என்கிறோம். இதில் நல்லவற்றை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் என்ன? வெறும் விளம்பரங்கள், பரிசுப்பரிமாற்றங்களை விட தாம் கொண்டுள்ளது உண்மையான காதலா? அதன் நோக்கம் என்ன? அதனால் இலட்சியம் பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி சுயமதிப்பீடு செய்யும் நாளாக இதனைக் கொள்ளலாம் அல்லவா?

ஆம். காதலின் அழகு மனக்கண்ணுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஊடல்கூட குதூகலமான இன்பத்தை தருகிறது. இனிமையான பொழுதுகளைத் தருகிறது. வாழ்க்கையை ரசிக்கத் தூண்டுகிறது. உழைப்பில் ஈடுபடுத்துகிறது.

இதயத்தின் ஆணிவேர் வரை சென்று ஒவ்வொரு நமிடங்களையும் ரசனை நிறைந்த ரம்மியமான பொழுதுகளையாய் கழியச்செய்யும் காதலின் மகத்துவம் உணர்ந்து புரிதலோடு தொடர்வோம்.
காதலர் தினம் இன்பம் நிறைந்ததாகட்டும்.

அருகருகே வரையப்பட்டாலும்
சேர முடியாத சித்திரங்களாய்
நாம்

அத்திபாரமாய் இருக்கிறது
காதல்
அனைத்தையும் தாங்கிக்கொள்ள
இருக்கிறாய்
நீ

நாம்
என்பதை ஏற்றுக்கொள்ளும் வரை
காலத்தோடு பயணிப்போம்

காதல்
காலம் கடந்தும் வாழும்

- ஆர்.நிர்ஷன்
(நன்றி வீரகேசரி வாரவெளியீடு 08.02.2009)

விரிவாக படிக்க ……..

'அன்பு' எத்தனை மகத்தானது?















































விரிவாக படிக்க ……..

'வீர இளைஞர்களின் மகாத்மா'



12.01.2009 – சுவாமி விவேகானந்தரின் 146 ஆவது ஜனனதினமாகும்.

(பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும் - சுவாமி விவேகானந்தர்)

“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் வீரவரலாறு மிகச்சுவையானது. அவர் பட்ட கஷ்டங்கள் நேர்ந்த இன்னல்கள் எல்லாவற்றையும் உடைத்தெரிந்து மின்னிமிளிர்ந்து புதிய பாதைக்கு வழிகாட்டிய பெருந்துறவி.
எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் 146 ஆவது ஜனன தினம் நாளை அனுட்டிக்கப்படுகிறது.

நரேந்திரன் என்ற இளமைக்கால பெயர்கொண்ட சுவாமி 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்தார். சிறுபராயம் முதலே பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய நரேந்திரனிடம் காணப்பட்ட பிரகாசமான கண்கள் மகான் ஆகப்போவதை முன்னதாகவே சுட்டுவதாய் அமைந்திருந்தன.

கடவுள் எப்படிப்பட்டவர்? எப்படியிருப்பார்? எப்படிக்காட்சி தருவார்? போன்ற கேள்விகள் நரேந்திரனிடம் இயல்பாகவே காணப்பட்டன. காலப்போக்கில் இந்தக் கேள்விகளுக்கு விடைகண்ட பிறகுதான் மறுவேலை என்ற நிலைக்கு நரேந்திரன் மாறிவிட்டார்.
அப்போது சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேந்திரன் கடவுளைப் பற்றி அறிவதற்காக அவரிடம் செல்கிறார். நரேந்திரனைக் கண்டவுடனேயே முன்பலகாலம் நட்பிருந்ததுபோல பேசிய இராமகிருஷ்ணர், ‘உனக்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். ஏன் தாமதமாக வருகிறாய்? என்னோடு வா’ என அணைத்துக்கொள்கிறார். இராமகிருஷ்ணரின் தீர்க்கதரிசனத்தில் நரேந்திரனைப் பற்றி அவர் அறிந்துகொண்டார்.

அதன் பின்னர் கடவுளைப் பற்றி இராகிருஷ்ணர் கூறிய பல விடயங்கள் நரேந்திரனை சிந்திக்க வைத்தன. சில விடயங்களை நரேந்திரன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். எனினும் செயல்பாட்டு hPதியான குருவின் பாடத்தில் இறைவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் நரேந்திரன் சுவாமி இராமகிருஷ்ணரின் முதற்சீடராவதுடன் விவேகானந்தர் என்ற திருநாமத்தையும் பெறுகிறார்.

‘எனது மரணத்தின் பின்னர் எதைப்பற்றியும் கவலைப்படாது உலக மக்களின் விடிவுக்காகவும் இறையுணர்வின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பாடுபடுவதற்கு நீயே பொருத்தமானவன்’ என்ற தனது குருவின் வேதவாக்கிற்கிணங்க எல்லாவற்றையும் துறந்து தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வீறுகொண்டு சேவைசெய்யத் துணிகிறார் விவேகானந்தர்.

மகத்தான இறையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு. அதனை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் தத்துவ நோக்கம். வெறும் புத்தகங்களை படித்துக்கொண்டு கற்பனாவுலகத்தில் வாழ்வதில் அந்த இறையுணர்வு கிடைத்துவிடப்போவதில்லை. அந்த மகத்துவமான உணர்வு உணரப்படவேண்டிய ஒன்று. அவ்வாறு உணரப்பட்டவுடன் மனித சேவையே மனதில் முன்னிற்கும் என்ற கோட்பாட்டை அதிகம் வலியுறுத்திய விவேகானந்தர் இந்திய இளைஞர்களை தனது அறப்போராட்டத்தில் இணைவதற்கு அழைத்தார்.

பாரத நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க, வெறும் கமண்டலத்துடன் மட்டும் புறப்பட்டு பல்வேறு சேவைகளை செய்யத்தொடங்கினார். குறிப்பாக, மக்கள் சோம்பேறிகளாக இருப்பதையும் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதையும் உணர்ந்து அதற்கேற்றாற்போல் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செய்தார். ஆன்மிகம் சார்ந்த மேடைப்பேச்சுகளால் கவரப்பட்ட மக்கள் முற்றிலுமாய் மாறியதில் வெற்றிகண்டார் வீரத்துறவி.
இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து மக்களைப்பற்றி அறிந்துகொண்ட சுவாமி, தனது பயணத்தின் முடிவில் கன்னியாகுமரி சென்று கடல்நடுவே அமைந்த பாறை ஒன்றின் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்தார். பாரதத்தின் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் குறித்து தியானித்ததாக பின்னர் தான் எழுதிய நு}லில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

அன்னை சாரதையிடம் ஆசிபெற்று 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சிகாகோவில் இடம்பெற்ற சர்வமத மகாசபையில் இந்தியப் பிரதிநிதி என்ற வகையில் சுவாமி கலந்துகொண்டார். அங்கு ஆவர் ஆற்றிய உரையின் ஆரம்பமும் உரையும் அனைவரையும் ஏகமாக கவர்ந்திழுத்தது. மதத்தின் பெருமையையும் தாய்நாட்டுக்கான தனிமனிதனின் கடப்பாட்டையும் சமூகத்தின்மீதான சேவை நிலையையும் அங்கு தனது சிம்மக்குரலில் அமெரிக்காவில் பரப்பினார்.

சிகாகோவில் அவர் நிகழ்த்திய உரை பெரும் பிரசித்தி பெற்றதாகும். “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்” என்று சற்றும் பயமின்றி அவர் பேசினார்.

“விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்” என மதம்சார் கடப்பாட்டையும் விளக்கினார்.

இன்னும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கியிருந்து வேதாந்தம் பற்றிய பரப்புரைகளில் ஈடுபட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் கொழும்பிலும் தனது வீர உரையை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று உலகமெங்கிலும் கிளைவிரித்துப் பரப்பி சமுக சேவைகளில் முன்னிற்கும் இராமகிருஷ்ண மடங்களின் முதற்கர்த்தா சுவாமி விவேகானந்தரே. கல்கத்தாவில் மக்கள் சேவைக்கென தனது குருவின் பெயரால் இவர் உருவாக்கிய இராமகிருஷ்ண மடம் பின்னர் சேவைவிஸ்தரித்து இன்றும் மக்கள் சேவையில் ஈடுபடுகின்றமை நாம் அறிந்தவிடயம்.
‘எழுமின். விழிமின். கருதிய கருமம் கைகூடும்வரை அயராது உழைமின்’ என்ற விவேகானந்தரின் மகாவாக்கியம் இன்றும் இளைஞர்களின் வீரவாக்கியமாக உள்ளது.

இறைபணியுடன் தேசப்பற்றையும் ஊட்டிய சுவாமி 1902 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி முத்திப்பேறு பெற்றார். மிகக்கடுமையான உழைப்பினால் நோய்வாய்ப்பட்டமையே இவருடை இறப்புக்குக் காரணமாகும்.

வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகளேயாயினும் இந்த வீரத்துரவியின் ஆற்றல்மிகுந்த சமுதாயப் பணிகள் மிகப்பரந்தன. சுவாமியின் ஜனன தினத்தில் அவரது வழிமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் வழிநடப்பதே நாம் அவருக்கு செய்யும் கௌரவ மரியாதையாகும்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனையிலிருந்து சில:

• செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

• உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

• நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

• உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

• ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

-இராமானுஜம் நிர்ஷன்

நன்றி - வீரகேசரி வார வெளியீடு 11.01.2009

(சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தையொட்டி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு வீர இளைஞர்கள் தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. வீர சத்தியப்பிரமாணம், சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுடன் அறநெறி பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஆசிரியர்களுக்கு வீர இளைஞர் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முடியுமானால் கலந்துகொள்ளுங்கள்.

விரிவாக படிக்க ……..