Todays Date:

'நண்பன்' ஒரு பார்வை

சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நண்பன்| திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஷங்கர் என்ற பிரமாண்டத்தின் இயக்கம், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, ஹரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி ஆகிய திறமைசாலிகளின் பங்களிப்பு, ஹிந்தியில் மாபெரும் வெற்றியைத் தந்த 3 இடியட்ஸின் ரீமேக் ஆகியன சினியுலகை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு இட்டுச்சென்றிருந்தன.

அமைதியாக ஆரம்பமாகிறது படம். திரையில் விஜய், இலியானா, ஷங்கரின் பெயர்கள் தெரியும்போது ரசிகர்களின் கூச்சல் அரங்கை அதிர வைக்கிறது.

தமிழகத்தின் முதற்தர பொறியியல் கல்லூரியில் ஜீவா (சேவல்கொடி செந்தில்), ஸ்ரீகாந்த்(வெங்கட் இராமகிருஷ்ணன்) நண்பர்களாகின்றனர். இவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்து படிக்கும் விஜய் (பஞ்சவன் பாரிவேந்தன்) மூன்றாவது நண்பராக இணைந்து கொள்கிறார். கல்லூரியின் அதிபர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரது மகள் இலியானா (ரியா–வைத்தியர்).

கல்லூரியில் அவ்வப்போது இடம்பெறும் குறும்புச் செயல்கள், சில சோகம் நிறைந்த காட்சிகள், விஜய் - இலியானா சந்திப்பு என கலகலப்பாக நகர்கிறது கதை.

எல்லாம் நன்மைக்கே| என்ற கருப்பொருளை தன்னகத்தே கொண்டு அதனை தன் நண்பர்களுக்கு மத்தியிலும் விதைக்கிறார் விஜய். கல்லூரி அதிபரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டு தூற்றப்பட்டாலும் முதல்நிலை மாணவன் என்ற பெயரை விஜையே தன்வசப்படுத்திக் கொள்கிறார்.

பட்டம் பெற்ற பின்னர் யாருக்கும் சொல்லாமல் நண்பர்களைப் பிரிந்து செல்கிறார் விஜய்.
நண்பனைத் தேடிச் செல்லும் ஜீவா, ஸ்ரீகாந்த் விஜையை கண்டுபிடித்தார்களா? விஜய் - இலியானாவின் காதல் என்னவானது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது திரைக்கதை.

ரீமேக் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஹிந்திப் படத்திலிருந்து விலகி விடாமலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வும் சுவாரஸ்யம் குறையாமல் கதையமைத்ததில் ஷங்கருக்கு ஒரு 'சபாஷ்' போடலாம்.

கதையின் ஆரம்பம் கல்லூரிக் கால குறும்புகளோடு நகர்கிறது. தமிழுக்கு ஏற்றாற் போல் சத்யராஜ் ஓரிரு இடங்களில் தனக்குரிய தனித்துவத்தை நிரூபிக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த் முழுமையாக கதையுடன் ஒன்றிப்போகிறார்கள். ஸ்ரீகாந்த் தனது ஆசையைப் பெற்றோரிடம் விளக்கும்போது வெளிப்படுத்தும் அளவான நடிப்புத் திறனை பாராட்டத்தான் வேண்டும். அதேபோன்று ஜீவா தனது தந்தையின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையில் தெரிந்துகொண்டதும் கண் கலங்கும் காட்சி திரையரங்கை மௌனமாக்குகிறது.

ஸ்ரீவத்சன் (சைலன்சர்) எனும் கதாப்பாத்திரத்தில் சத்யன் கச்சிதமாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். (இனி வாய்ப்புகள் அதிகரிக்க இடமுண்டு). விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் இணைந்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்து.

இலியானா! அடடா... இந்த இடையை இவ்வளவு நாள் திரையில் பார்க்கவில்லையே என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியவராக ஜொலிக்கிறார். எனினும் ஒருசில இடங்களில் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்த முயன்று தோற்றுப்போவதாகத்தான் தோன்றுகிறது.
வேறொருவருக்கு பட்டம் பெற்றுக்கொடுப்பதற்காக அவரது பெயரில் கல்வி கற்பதற்காக வந்தவரே விஜய் என்பதை நண்பர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தோன்றும். (3 இடியட்ஸ் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாது).

அந்தக் கட்டத்தில் கௌரவ வேடமேற்கும் எஸ்.ஜே.சூர்யாவும் தன் பங்குக்குத் திறமையைக் காட்டியிருக்கிறார்.

இலியானாவின் சகோதரிக்குப் பிரசவம் பார்க்கும் காட்சிகள் பரபரப்பையும் சோகத்தையும் உண்டுபண்ணுகின்றன. இப்படியொரு காட்சி அவசியம்தானா எனவும் சிந்திக்கத் தோன்றும். ஏனென்றால், ''நீதான் பிரசவம் பார்க்க வேண்டும்' என இலியானா கூறியதும் அலறுகிறார் சகோதரி. அது மரண ஓலமாய் ஒலித்து மனதைக் கீறுகிறது.

பாடல்களில், 'என் பிரண்டப் போல யாரு மச்சான்....' மற்றும் 'அஸ்கு லஸ்கா ....' பாடலும் மனதில் நிறைகின்றன. ஏனைய பாடல்களும் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றே சொல்லலாம்.
சரி, விஜய் என்ற தளபதியைப் பற்றிப் பார்த்தால், 

அடிதடி சண்டைகள் எதுவுமில்லாமல் அடக்கமாக வலம் வருகிறார். படம் முழுவதும் விஜையைச் சுற்றியே நகர்கிறது. வழமையான உதட்டோரச் சிரிப்பு ஓரிரு இடங்களில் வெளிப்படுகிறது. போதைக் காட்சியில் இயல்பான நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்தமை தெரிகிறது. அதேபோன்று ஒரு சில இடங்களில் கல்லூரி மாணவனாக பொருந்தாமல் போனாலும் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வழமையான விஜய் படங்களை விட மாறுபட்டிருக்கிறது.

ஷங்கர் என்ற சிற்பி நல்ல கதாப்பாத்திரங்களுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஷங்கரின் இதுவரையான படங்களைப் பார்த்து ரசித்து மாற்றங்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ரீமேக் படம் புதிதாக எதுவுமின்றி வெளிவந்துள்ளமை கவலையை உண்டுபண்ணிருக்கலாம். ஆயினும் பாடல் காட்சிகளில் தன் தனித்தன்மையைக் கொண்டுவந்திருக்கிறார்.

ஹிந்தியில் 3 இடியட்ஸ் பார்த்தவர்களுக்கு நண்பன் கொஞ்சம் பழையதாகத் தெரிந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கிறது. ஏனெனில் கதையின் நகர்விலும் சுவாரஸ்யத்திலும் எதிர்பார்ப்பிலும் எந்தக் குறையையும் ஷங்கர் வைக்கவில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

ஒரு நீண்ட பயணத்தின் கதை

“எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்” என்கிறார் துறவி இந்திரானந்த.

தெற்கிலிருந்து வடக்குக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வுகூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன.

“நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வருகிறேன். உலகத்தில் எது உண்மையானது, எது நிரந்தரமானது என்பதை அறிந்துகொண்ட போதுதான் துறவறத்தின் மகிமை புரிந்தது.

1974ஆம் ஆண்டு முழுமையாகத் துறவறம் பூண்டு 1981ஆம் ஆண்டுமுதல் தனிமையில் தியானம் செய்துவருகிறேன். யால, குமன போன்ற காடுகளிலும் ஆற்றுக்கரைகளிலும் தியானம் செய்தேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நாகதீபத்தை அடையவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வழியில் யாழ்ப்பாணத்தின் வணக்கஸ்தலங்களைப் பார்க்கவேண்டும் என எண்ணினேன். சில வேளைகளில் இது கடவுளின் கட்டளையாகக் கூட இருக்கலாம்.

கால்நடையாக வரும்போது இயற்கையின் பாதிப்புகள் நிறைய இருந்தன. எனினும் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தம்புளை காட்டுவழியே நான் தனியாக வரும்பொழுது கடவுளை மட்டுமே துணைக்கு அழைத்துக்கொண்டேன். பௌத்த விகாரைகளிலும், இந்துக் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பள்ளிவாயில்களிலும் தங்கினேன். சில நாட்கள் சுடுகாடுகளிலும் தங்கியிருந்தேன். என்னைத் தீய சக்திகள் அண்டாதவண்ணம் தியானம் செய்தேன்” என சாந்தமாகக் கூறுகையில் அவருடைய கண்களில் பயணத்தின் அபாயம் தெரிந்தது.

“நான் புறப்படும்போது கையில் பணம் இருக்கவில்லை. வழியெங்கும் பிச்சை எடுத்து உண்டு வந்தேன்.

கால்நடையாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைய இரண்டரை மாதங்கள் சென்றன. வள்ளிபுரம், செல்வச் சந்திநிதி, நல்லூர் உட்பட அனைத்துக் கோயில்களுக்கும் யாத்திரை மேற்கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்டது யாழ்ப்பாணம். புதுமையான பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. தெற்கிலுள்ளவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து அறிவதில்லை. அத்துடன் இங்குள்ள ஒவ்வொரு வணக்கஸ்தலங்களும் அபூர்வ சக்தியுடையன. அதனை என்னால் உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்து மக்கள் பண்பாடு தெரிந்தவர்கள். என்னோடு அன்பாகப் பேசிப் பழகினார்கள். அவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் அமையவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என சாந்தமாகக் கூறி முடித்தார்.

கையில் பிச்சைப் பாத்திரத்துடனும் கமண்டலத்துடனும் அதிகம் பேசாதவராய் இருந்த அந்தத் துறவி தன் மனதில் தோன்றிய மேலும் சில விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். அவை ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தன.

“2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு பேரழிவொன்று ஏற்படும். அது ஏதோ ஒரு சக்தியால் நிகழும். என்னால் அதை ஊகிக்க முடிகிறது.

கடும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்கள். நான்கு இடங்களில் எரிமலைகள் உருவாகும். அது மேலும் அழிவை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட துர்விடயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அதன் பிறகு 700 ஆண்டுகள் நாட்டுக்கு நல்லதாக அமையும். எனினும் பெண்கள் ஆட்சியாகவே இருக்கும். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் விகிதாசரம் குறையும்.



அந்த 700 ஆண்டுகள் கழிந்த பின்னர் தர்மத்துடன் ஆட்சியமைக்கக் கூடிய மன்னன் ஒருவன் வருவான். அவனுடைய ஆட்சியில் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வார்கள். என்னுடைய தியான சக்தியினால் நான் கண்ட விடயங்கள் இவை. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நான் கூறியிருக்கிறேன்” எனக் கூறி எமக்கு நன்றி தெரிவித்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..