Todays Date:

நிவேதப்ரியா VII

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் கலந்தனவே”

இது குறுந்தொகைப் பாடல்.

நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நீயும் நானும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றையொன்று பிரிக்க முடியாததுபோல, நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்துவிட்டனவே என்கிறது அதன்பொருள்.

உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்த வரிகள் இவை.

மலர்ந்த முகமும் தலைசாய்த்ததான ஓரப்பார்வையும் பிடிமானத்தை மேலும் அதிகரித்தன. ஏதேதோ பேசினோம் - பகிர்ந்துகொண்டோம். ஆயினும் முழுமையாக முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொள்வதற்கு மனம்துடித்ததேயன்றி இலாவகமாய் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

சுவைசொட்டும் பள்ளிக்காலங்களையும் விட்டு விலகாத பாழ்ய நினைவுகளையும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டதில் முழுத் திருப்தி.

படித்தவள் - பெருந்தன்மையில்லை
பண்பானவள் - பொறாமைகளில்லை
அன்பானவள் - ஆடம்பரங்களில்லை

சாந்தமான பார்வைகளால் சங்கேதங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

கடிகார முள் தடைபட்டாலும் நேரத்தை விஞ்ச முடியாத துர்பாக்கியசாலிகளாய் நிறைய எதிர்பார்ப்புகளோடும் - நிறைவான பொழுதுகளைக் கழித்த திருப்தியோடும் விடைபெற்றுக்கொண்டோம்.

பெண்ணுக்குத் தையல் என்றொரு மறுகருத்துண்டு. பிரிந்த உறவுகளை இணைத்தல், உடைந்துபோன மனதை ஒத்தடமாய் மாற்றியமைத்தல் போன்றவற்றை அன்போடு செய்விப்பதால் இந்தப்பெயருண்டு என எங்கோ படித்த ஞாபகம்.

மெய்தான்.

தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து பல்திசைகளுக்குச் செல்லும் அலைகள்போல ஆற்றாமை எனும் இயலாமையால் சிதறிப்போன மனதோடு வந்த எனக்கு ஆறுதலாய் அவளும் அந்தச் சந்திப்பும் மாறியிருந்தது.

காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?

வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?

இவை அன்றிரவு என் பாமர உள்ளம் உதிர்த்த வரிகள்.





எப்போதும் இணையமுடியாது எனத் தெரிந்தும் குரங்கு மனது எப்படியெல்லாம் அலைபாய்கிறது? வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்றா?

நிலையாமை பற்றிக் கற்றறிந்தும் இந்த விடயத்தில் பக்குவம் என்பக்கம் வராமைக்குக் காரணம் என்ன?

இப்படியும் நான் சிந்திக்கையில் அதையும் தாண்டி என் ஜீவனின் ஆனந்த நரம்புகளில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது ப்ரியாவின் பிஞ்சுக் குரல்.

என்னைத் தாண்டிய மாற்றுச்சூழலுக்குள் மீண்டும் லயித்துப்போகிறேன்…. அதன்பின்வந்த ஜாமங்கள் எப்படிக் கழிந்ததென்பதை வெளிச்சொல்ல எத்தனிக்கையில் ஓர் அசட்டு வெட்கம் கட்டிப்போடுகிறது.

அமைதியாய் இருந்த என்னுடைய தொலைபேசிக் குழந்தை இரவு 11 மணிக்கு அழுதது. அவள் இலக்கத்தைப்பார்த்து இயல்பாய் உதடுகள் புன்முறுவலைப்பிரசவிக்க “ஹெலோ” என்றேன். 30 செக்கன் மௌனத்தின் பிறகு “கனவுபோல் இருக்கிறது” என ஆரம்பித்தாள்…

(தொடர்ந்து பேசுவேன்…)

1 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா மிகவும் அருமை உன் எழுத்து என்னை என்னையும் மழைய நினைவுகளுக்கு கொண்டுச் செல்கின்றது
Renuka das