Todays Date:

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் 'Cyber Crime'

பேஸ்புக் சமூக வலைப்பின்னலானது உலகநாடுகளில் அடைந்துவரும் வளர்ச்சியைப்போல இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது.


ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுவரும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடிவதில்லை.

ஆம்! பேஸ்புக்கானது பிரபலமடைந்துவரும் அதேநேரம் கடவுச்சொல்லை வேட்டையாடும் களமாகவும் மாறிவருகிறது என்கிறார்கள் இணையப் பயன்பாட்டாளர்கள்.

பல்வேறு பெயர்களில் அறிமுகமாகும் இணையத் திருடர்கள் புதிய கணக்குகளை உருவாக்கியும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் தனிப்பட்ட நபரின் இரகசியங்களை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நடவடிக்கை இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு இத்தகவலை உறுதி செய்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (
ICTA) கீழ் இயங்கும் இக்குழு இணையத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இணைத்தில் திருட்டுச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கினூடாக இவ்வாறு பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்பில் இக்குழுவுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரிக்குத் தெரிவிக்கிறார்.

உண்மைச் சம்பவம்

இது இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவமொன்று,

சுகத் என்ற இளைஞர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் அதனை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கையில் கவிந்த்ரா என்ற பெண் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்புமடல் விடுத்துள்ளார்.

மற்றுமொரு இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிச்சியில் கவிந்த்ராவை இணைத்துக்கொண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக்கொண்டுள்ளார்.

சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற கவிந்த்ராவின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற்காகக் காத்திருந்த வேளை அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது.

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (
Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் கவிந்த்ரா. அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் சுகத்தின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.

ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப்பக்கத்தில் பதிவு செய்தார் சுகத்.

அதன்பின்னர் கவிந்த்ராவைக் காணவில்லை. சுகத்தின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை.

சுகத்தின் நண்பர் ஒருவர் கூறியதன் பிரகாரம்இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இதுதான் " உங்கள் கடவுச்சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் நவீனுடன் தொடர்பினை ஏற்படுத்தி பணம் செலுத்துங்கள்".

இந்தத் தகவலின் பின்னர் சுகத் பாதுகாப்புக்காக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவைத் தொடர்புகொண்டுள்ளார்.
இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்களும் பணம் செலுத்தியவர்களும் இலங்கையில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

சுகத்தைப் போன்றவர்கள் மட்டுமன்றி பேஸ்புக்கில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ரொஷான் சந்திரகுப்தா.

தன்னைத் திருமணம் முடிக்கத் தவறிய ஆண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இளம்பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ள விடயம், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களை கேளிக்கையாக்கிய சம்பவம், கடவுச்சொல்லைத் திருடி பேஸ்புக் புகைப்படத் தொகுப்பில் நீலப்படங்களை இணைத்துவிட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நாம் இங்கு உதாரணமாகக் கூறலாம்.


இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

1. அடையாளம் தெரியாத நபர்களின் வேண்டுகோள் மடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

2. நீங்கள் அறிந்திராத நபர்களிடமிருந்துவரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களை சொடுக்கிப் பர்வையிடாதீர்கள்.

3. சமூக வலைப்பின்னல்களில் திடீரெனத் தோன்றும் தொடுப்புகளை அகற்றிவிடுங்கள்.

4. உங்களுக்கென உள்ள சொந்தத் தகவல்களை தரவேற்றம் செய்யாதீர்கள்

இவை அடிப்படையான சில விடயங்களேயன்றி உங்கள் மின்னஞ்சல் கணக்காயினும் பேஸ்புக் அல்லது மாற்றுக் கணக்குகளாயினும் பொது இடங்களில் உபயோகப்படுத்துதலிலும் ஏனைய பாதுகாப்புகளிலும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக் கணக்குகளில் வேட்டையாடும் நபர்களைத் தவிர வலைப்பதிவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட இணையப் பாவனைப் பக்கங்களை முடக்குவதிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நடைமுறை உலகில் இணையம் தொடர்பான எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் திருட்டுச் செயல்களையும் 'சைபர் க்ரைம்(Cyber Crime)' என அழைக்கிறார்கள்.

அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை உலகுக்கு எடுத்துக்காட்டிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தற்போதைய நடவடிக்கைகளை அடுத்து இச்சொல் இணையப் பாவனையாளர்களிடையே மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

ஆகையால் இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அவ்வாறானதொரு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேர்ந்தால்
slcert@slcert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு தொடர்புகொண்டு உதவி கோர முடியும்.

இலங்கையைப் பொருத்தவரையில் கடவுச்சொல் திருட்டு மற்றும் ஏனைய முறைகேடான விடயங்கள் குறித்து அனைவருமே தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.

நிகழ்கால உலகில் இளம்பராயத்தினர் இணைய உலகிற்குள் வெகுசீக்கரமாகவே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் இணையத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

ஆக, எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கரங்களிலேயே தங்கியுள்ளது. உலகமயமாக்கலிலும் தொடர்பாடலிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரியதொரு மாற்றத்தைக் கண்டுவரும் இணையத்தின் அபார வளர்ச்சியின் போக்கில் எமது பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுகொள்ள வேண்டும்.

-இராமானுஜம் நிர்ஷன்

2 comments:

Anonymous said...

Thanks for making this kind of awareness among public.......
good.

jeevajothy nallaiah said...

tx 4 ur in4mtin anna